ஜூலை,04,2016. எவ்வித விதிவிலக்குமின்றி அனைத்துக் கிறிஸ்தவர்களும், சிறப்பான மறைப்பணியாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு எழுபத்திரண்டு சீடர்களை பணியாற்ற அனுப்பியது குறித்த இஞ்ஞாயிறு லூக்கா நற்செய்தி வாசகத்தை (லூக்.10,1-12,17-20) மையப்படுத்தி மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அறுவடையின் ஆண்டவர் அனுப்பிய பணியாளர்கள், இறையாட்சியின் மறைப்பணியாளர்கள் என்றும், இந்தப் பணிக்காகவே ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.
இந்த சிறப்பான பணிக்கு, தாராள உள்ளம் அதிகம் தேவை என்றும், ஒருவரின் கண்களும், காதுகளும் உன்னதத்தில் இருப்பவர் நோக்கித் திரும்பி, அவரின் உதவிக்காக இறைஞ்ச வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
உலகில் ஒவ்வொருக்கும் மீட்பின் செய்தியை அறிவிப்பதே இந்தப் பணியாளர்களின் வேலை என்றும், மறைப்பணியாளர்கள், வெகு தொலைவில் இருப்பவர்கள் மட்டுமல்ல, இந்த வளாகத்தில் நிற்கும் நீங்கள் ஒவ்வொருவருமே மறைப்பணியாளர்கள்தான் என்றுரைத்த திருத்தந்தை, இந்தக் கொடையை இயேசு, தம் தூய ஆவியாரோடு நமக்குத் தருகிறார் என்றும் கூறினார்.
இயேசு வழியாக, கடவுள் நம் மத்தியில் ஆட்சி செய்கின்றார் எனவும், அவரின் இரக்கம் நிறை அன்பு, பாவத்தையும், மனிதத் துன்பங்களையும் மேற்கொள்கின்றது எனவும், இந்த நற்செய்தியையே பணியாளர்கள், ஒவ்வொருவருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இப்பணியாளர்கள், நம்பிக்கை, ஆதரவு, அமைதி, பிறரன்பு ஆகிய செய்தியை வழங்க வேண்டும் என்றும், இறையாட்சியை ஒவ்வொரு நாளும் கட்டியெழுப்புவது அழகான செயல் என்றும் கூறிய திருத்தந்தை, இயேசுவின் சீடர்கள் எவ்வித உணர்வோடு இப்பணியைச் செய்தனர் என்பதையும் விளக்கினார்.
மேலும், வத்திக்கான் வளாகத்தில் நண்பகல் மூவேளை செப உரையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களில் இளையோரைப் பார்த்து, உங்களில் எத்தனை பேர் ஆண்டவரின் குரலைக் கேட்கின்றீர்கள் என்று கேட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அஞ்ச வேண்டாம், துணிச்சலாக இருந்து, இயேசுவின் சீடர்கள் நமக்கு வழங்கிய இந்தச் சுடரை எடுத்துச் செல்லுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |