2016-06-29 15:19:00

திருத்தந்தை - பல்வேறு இடர்வரினும், இறைவனைப் பின் தொடர்க


ஜூன்,29,2016. "மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஆண்டவர் இன்று கூறுவது இதுவே: பல்வேறு இடர்கள் வரினும், என்னைப் பின் தொடர்க; நற்செய்தியை அனைவருக்கும் பறைசாற்றிய வண்ணம் என்னைப் பின் தொடர்க" என்ற செய்தியை தன் டுவிட்டர் பக்கத்தில் ஜுன் 29, இப்புதனன்று வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தூதர்களான புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகியோரின் பெருவிழா, ஜுன் 29, இப்புதனன்று கொண்டாடப்பட்டதையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் காலை 9.30 மணிக்கு திருப்பலியாற்றியத் திருத்தந்தை, உலகெங்கிலிருமிருந்து வந்திருந்த 25 பேராயர்களுக்கு பாலியம் என்ற தோள்பட்டையை வழங்கினார்.

திருஅவையை வழிநடத்தும் பாரம்பரியத்தைக் குறிக்கும் பாலியம் தோள்பட்டை, ஒவ்வோர் ஆண்டும், ஜுன் 29ம் தேதி, புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகியோரின் பெருவிழாவன்று, பேராயர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.

இத்தருணத்தையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி, மக்களை வழி நடத்துவோரை மையப்படுத்தி அமைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.