2016-06-28 16:10:00

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவைக்குத் தொடர்ந்து சேவை


ஜூன்,28,2016. வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், இச்செவ்வாய் முற்பகல் 11.45 மணியளவில் நடைபெற்ற, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின், குருத்துவ அருள்பொழிவின் 65வது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் சிறிய மூலையிலிருந்து அமைதி, வலிமை, நம்பிக்கை, பக்குவம், விசுவாசம், அர்ப்பணம், பிரமாணிக்கம் ஆகிய பண்புகள் வந்துகொண்டிருக்கின்றன என்று உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இவை, தனக்கும், அகிலத் திருஅவைக்கும் மிகுந்த நன்மை செய்கின்றன மற்றும் மிகுந்த வலிமையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

திருத்தந்தையே, தாங்கள் திருஅவைக்குத் தொடர்ந்து சேவையாற்றி வருகிறீர்கள், திருஅவையின் வளர்ச்சிக்கு, உயிர்த்துடிப்பு மற்றும் ஞானத்தோடு, தாங்கள் வழங்கும் உண்மையான பங்களிப்பு நிறுத்தப்படவில்லை என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் வாழ்வை, ஆண்டவரின் மீதான அன்பு ஆட்சி செய்கின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வயதும், வலிமையும் குறையும்போது புறக்கணிக்கப்படும் இன்றையக் கலாச்சாரத்தில், வத்திக்கான் தோட்டத்திலுள்ள Mater Ecclesiae இல்லத்தில் இருந்துகொண்டு திருஅவைக்குத் தொடர்ந்து சேவையாற்றி வருகிறீர்கள் என்றும் பாராட்டிப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், அவருடைய ஒரே சகோதரர் பேரருள்திரு ஜார்ஜ் ராட்சிங்கர் அவர்களும் ஜெர்மனியின் ஃப்ரெய்சிங் பேராலயத்தில், 1951ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி அருள்பணியாளர்களாகத் திருப்பொழிவு செய்யப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.