2016-06-27 15:44:00

திருத்தந்தை : நம் இதயத்தில் இடம் தேடுகிறார் இயேசு


ஜூன் 27, 2016. அர்மேனியா நாட்டில் தான் மேற்கொண்ட மூன்று நாள் திருத்தூதுப்பயணத்தை நிறைவுச்செய்து, இஞ்ஞாயிறு இரவு, உள்ளூர் நேரம் 8.30 மணிக்கு உரோம் திரும்பினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்மேனியாவின் எரேவான் விமான தளத்திலிருந்து ஞாயிறு மாலை புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 4 மணி நேர பயணத்திற்குப் பின் உரோம் சம்பினோ விமானத்தளத்தில் உள்ளூர் நேரம் இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தார், அப்போது இந்திய நேரம் நள்ளிரவு 12 மணியாகும்.

சம்பினோ விமான நிலையத்திலிருந்து நேராக உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயம் சென்று அன்னை மரிக்கு மலர்களை அர்ப்பணித்து நன்றி நவின்றபின் வத்திக்கான் திரும்பினார் திருத்தந்தை.

மேலும், இத்திங்களன்று டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை, அதில், 'நமக்காகக் காத்திருக்கும் இயேசு, நாம் நம் உள்மனதில் அவருக்கென இடம் ஒன்றை தயாரிக்குமாறு அழைப்பு விடுக்கிறார். அதை நாம் உணர்கிறோமா?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.