2016-06-24 16:46:00

மத விடுதலை அவையின் தலைவராக கத்தோலிக்க அருள்பணியாளர்


ஜூன்,24,2016. அனைத்துலக மத விடுதலை குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு அவையின் தலைவராக, கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவர், முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக அளவில் மத சுதந்திரத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து ஆராய்ந்து அதனை அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுச் செயலர், காங்கிரஸ் அவை, மற்றும் அரசுத்தலைவரிடம் சமர்ப்பிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ள இந்த அவைக்கு, தற்போது இயேசு சபை அருள்பணியாளர் Thomas Reese அவர்கள், அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 2014ம் ஆண்டு முதல் இவ்வவையின் அங்கத்தினராகச் செயலாற்றிவரும் அருள்பணி Reese அவர்கள், மத சுதந்திரம் உலகின் பல்வேறு பகுதிகளில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் இன்றைய சூழலில், இவ்வவையின் தலைவராக பொறுப்பேற்று, ஏனைய அங்கத்தினர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகக் கூறினார்.

1998ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாக்கப்பட்ட உலக மத விடுதலைக் குறித்த இந்த அவை, மத உரிமைகளை மீறும் நாடுகளைக் குறித்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைக்க உதவுகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.