2016-06-24 16:16:00

இது இரக்கத்தின் காலம் : எல்லாரிலும் ஒளிந்திருக்கும் பிடிவாதம்


கமலம், படிப்பிலும் சரி, எல்லாரிடமும் பழகுவதிலும் சரி நல்ல சிறுமி எனப் பெயர் வாங்குபவர். ஆனால் கமலத்தின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. அந்த ஆண்டு தனது பிறந்தநாளுக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் வேண்டும் என்று அடம் பிடித்தார். ஆனால், கமலத்தின் அம்மாவும், அப்பாவும் தங்கள் சூழ்நிலையைக் கூறி, அடுத்த மாதம் வாங்கித் தருகிறோம் என்றனர். ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வரும்போது நான் கேட்ட கை கடிகாரம் இங்கே இருக்கணும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு’ என்று கட்டளையிடுவதுபோல் கூறிவிட்டுச் சென்றார். அன்று மாலையில் பள்ளி முடிந்ததும் கமலம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே அருகில் இருந்த ஒரு குடிசை ஓரத்தில் ஒதுங்கி நின்றார். அப்பொழுது அந்த வீட்டிற்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். “அப்பா உங்க கால் ரொம்ப அடிப்பட்டிருக்கு. இருந்தும் ஏன் லீவு எடுக்காம வேலைக்குப் போறீங்க?” என்று ஒரு சிறுமியின் குரல் ஒலித்தது. “நீதான், எல்லாரும் டூர் போறாங்க... என்னை அனுப்ப மாட்டீங்களான்னு கேட்ட இல்ல. நான் லீவு போடமா வேலைக்குப் போனாத்தான் உனக்கு டூர் போக பணம் தர முடியும்.’ என்றார். இல்லேப்பா நான் டூர் போகலை. அடுத்தவாட்டி போய்க்கிறேன். நீங்க உங்க காலைப் பார்த்துக்கோங்கப்பா” என்றார் அந்த வீட்டுச் சிறுமி. உடனே அந்தச் சிறுமியின் அம்மா, “இல்லைங்க, நீங்க ஓய்வு எடுங்க, அவள் டூர் போகட்டும். பண்ணைக்காரர் தோட்டத்திலே வேலைக்கு ஆள் கூப்பிட்டிருக்காங்க. நான் ஒரு வாரம் வேலைக்குப்போறேன். கிடைக்கிற பணத்துல அவளுக்கு டூர் போகவும், உங்க காலுக்கு வைத்தியம் பார்க்கவும் சிரியாக இருக்கும்”என்றார். மழை நின்றது. வீட்டிற்குச் சென்ற கமலத்தைப் பார்த்ததும், அவளது பெற்றோர், தயக்கத்துடன், “கமலம்...” என்று வாயெடுக்க, “அப்பா கைக்கடிகாரம் இப்போ இல்லைன்னா அடுத்த பொறந்த நாளைக்கு வாங்கிக்கலாம்” என்று கூறினார். அதைக் கேட்ட பெற்றோர் வியப்படைந்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.