2016-06-13 16:56:00

சிறார் தொழில்முறை ஒழிக்கப்பட திருத்தந்தை விண்ணப்பம்


ஜூன்,13,2016. வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் யூபிலி விழாத் திருப்பலியின் இறுதியில், மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள், சிறார் தொழில்முறை ஒழிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இன்றைய உலகின் சில முன்னுரிமைகளைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக சிறார் தொழில்முறை ஒழிப்பு தினம் பற்றிக் குறிப்பிட்டு, நவீன அடிமைமுறைகளுக்குக் காரணமாகும் அனைத்தையும் அகற்றுவதில் நம் முயற்சிகளைப் புதுப்பிப்போம் என்றும் கூறினார்.

உற்பத்தித் தொழிற்சாலைகள், வேளாண்மை உட்பட பல தொழில்களில், உலகில் 16 கோடியே 80 இலட்சம் சிறார், இன்னும் துன்புறுகின்றனர் என்று உலக தொழில் நிறுவனம் கூறுகிறது.

இன்னும், கடந்த சனிக்கிழமையன்று வெர்ச்செல்லியில், அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட இறையடியார் அருள்பணி ஜாக்கோம்மோ அபோந்தோ, மோன்ரெயாலே பேராலயத்தில் இஞ்ஞாயிறன்று அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட இறையடியார் லூர்தன்னை கப்புச்சின் சகோதரிகள் சபையை ஆரம்பித்த அருள்சகோதரி கரோலினா சாந்தோகனாலே ஆகிய இருவர் பற்றியும் பேசினார் திருத்தந்தை.

வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் யூபிலியில், பல்வேறு நாடுகளிலிருந்து கலந்துகொண்ட அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.