2016-06-09 15:41:00

மருத்துவர்கள் இரக்கத்தின் உண்மையான வெளிப்பாடுகள்


ஜூன்,09,2016. ஒரு மருத்துவரின் தனித்துவமும், அர்ப்பணமும், அவரின் அறிவு மற்றும் நிபுணத்தன்மையை மட்டும் சார்ந்து இல்லை, ஆனால், அவர், உடலிலும், மனத்திலும் துன்புறும் மக்களுக்கு, இரக்கம் நிறைந்த பரிவன்பைக் காட்டுவதை முக்கியமாகச்  சார்ந்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இஸ்பெயின் மற்றும் இலத்தீன் அமெரிக்க மருத்துவக் கழகங்களின் உறுப்பினர்கள் 150 பேரை, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்து, இஸ்பானிய மொழியில் உரையாற்றிய திருத்தந்தை, கருணை, மருந்தின் ஆன்மாவாக உள்ளது என்றும், கருணை என்பது, பரிதாப்பபடுவது அல்ல, ஆனால், துன்புறுவோரின் துன்பங்களில் பங்குகொள்வதாகும் என்றும் கூறினார்.

நம் தொழில்நுட்ப மற்றும் தனிமனிதக்கோட்பாட்டுக் கலாச்சாரத்தில், கருணை எப்போதும் காட்டப்படுவதில்லை, கருணை என்ற பெயரில், நோயாளரின் மரணத்தை ஏற்பவர்களும், அதை நியாயப்படுத்துபவர்களும் உள்ளனர் என்றுரைத்த திருத்தந்தை, உண்மையான கருணைப் பண்பு, யாரையும் ஒதுக்குவதோ, ஓரங்கட்டுவதோ அல்லது மதிப்பை இழக்கும்படிச் செய்வதோ அல்ல என்றும் கூறினார்.

உடல்நலம், மிக விலையுயர்ந்த கொடைகளில் ஒன்று மற்றும் இது, அனைவராலும் விரும்பப்படுவது என்றும் கூறிய திருத்தந்தை, கிறிஸ்தவ மருத்துவர்கள் எப்போதும் நல்ல சமாரியர்களாகச் செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

மதிப்பு, புரிந்துகொள்தல், கனிவு ஆகிவற்றிலிருந்து பிறக்கும் கருணை, நோயாளர்க்கு, மிகவும் மதிப்பு மிக்கதாய் உள்ளது என்றும், நோயாளரின் வாழ்வின் புனிதம் ஒருபோதும் இருளடைந்து விடக் கூடாது என்றும், இஸ்பெயின் மற்றும் இலத்தீன் அமெரிக்க மருத்துவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.