2016-06-09 16:03:00

திருத்தந்தையின் போலந்து திருத்தூதுப்பயண விபரங்கள்


ஜூன்,09,2016. 31ம் உலக இளையோர் தினத்தை முன்னிட்டு, வருகிற ஜூலை 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் போலந்து நாட்டுக்கு மேற்கொள்ளும் திருத்தூதுப்பயண விபரங்கள் இவ்வியாழனன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டன.

ஜூலை 27ம் தேதி புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு உரோம் Fiumicino பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரின் BaliceKraków புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் பன்னாட்டு விமான நிலையத்தை மாலை 4 மணிக்குச் சென்றடைவார்.

அவ்விமான நிலையத்தின் இராணுவத்தளப் பகுதியில் வரவேற்பு நிகழ்வுகளில் கலந்துகொள்வது, அரசு, பொது மக்கள் சமூகம் மற்றும் தூதரகப் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றுவது, வாவெல் மாளிகையின் பறவைகள் அறையில் அரசுத்தலைவரைச் சந்திப்பது, கிராக்கோவ் பேராலயத்தில் ஆயர்களைச் சந்தித்து உரையாற்றுவது ஆகியவை திருத்தந்தையின் முதல் நாள் நிகழ்வுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.   

செஸ்டக்கோவா நகர் சென்று யஸ்ன கோரா கறுப்பு மாதாவிடம் செபித்தல், போலந்து நாடு திருமுழுக்குப் பெற்றதன் 1050ம் ஆண்டு நிறைவுத் திருப்பலியை, செஸ்டக்கோவா திருத்தலப் பகுதியில் நிறைவேற்றுதல், மீண்டும் கிராக்கோவுக்கு வந்து Jordan a Błonia பூங்காவில், உலக இளையோரின் வரவேற்பு நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றுதல் ஆகியவை ஜூலை 28, வியாழன் பயணத் திட்ட நிகழ்வுகளாகும்.

ஜூலை 29, வெள்ளியன்று, 2ம் உலகப்போரின் Auschwitz நாத்சி வதைமுகாமைப் பார்வையிட்டு உரையாற்றுதல், சிறார் மருத்துவமனையைப் பார்வையிடுதல், உலக இளையோரின் சிலுவைப்பாதை பக்தி முயற்சியில் கலந்துகொள்தல்,

ஜூலை 30 சனிக்கிழமையன்று, கிராக்கோவ் இறைஇரக்க திருத்தலத்தைப் பார்வையிடுதல், இளையோர் ஒப்புரவு வழிபாட்டில் கலந்துகொள்தல், அருள்பணியாளர், துறவிகளுக்குத் திருப்பலி, இளையோரோடு மதிய உணவு, உலக இளையோருடன் மாலை திருவழிபாடு,

ஜூலை 31, ஞாயிறன்று, இறைஇரக்க வளாகத்தில் 31ம் உலக இளையோர் தின நிறைவுத் திருப்பலி, மூவேளை செப உரை....

போன்ற பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து, ஞாயிறு இரவு 8.25 மணியளவில் உரோம் Ciampino விமான நிலையம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.