2016-06-04 16:12:00

திருத்தந்தை : மறைப்பணி திருஅவையை அமைக்கிறது


ஜூன்,04,2016. மறைப்பணி, திருஅவையை அமைக்கிறது மற்றும் அது, விசுவாசிகளை இறைவனின் மீட்புத்திட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றது என்று, பாப்பிறை மறைப்பணிக் கழகங்களின் தேசிய இயக்குனர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

பாப்பிறை மறைப்பணிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டையொட்டி, இச்சனிக்கிழமையன்று, அக்கழகத்தின் 170 பேரைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இக்கழகம் உருவாகக் காரணமான அருளாளர் அருள்பணியாளர் பவ்லோ மன்னா பற்றியும், பின்னர், இக்கழகம் திருத்தந்தையின் அங்கீகாரம் பெற்றதையும் குறிப்பிட்டார்.

உலகளாவியத் திருஅவையின் மறைப்பணி தனித்துவத்திற்குப் பணியாற்றும் மற்றும் அதைப் பேணி வளர்க்கும் நோக்கத்தில், மறைத்தளங்களில் நிரந்தரப் பயிற்சிகளுக்கு அர்ப்பணிக்குமாறு, தேசிய இயக்குனர்களையும், அவர்களுடன் ஒத்துழைப்பவர்களையும்  கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

குறிப்பாக, புதிய திருஅவைகளின் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இவைகளுக்கு, மிகுந்த அன்புடன் பணியாற்றவும், மதமாற்றம் வழியாக அல்லாமல், கவர்ச்சி வழியாக, மக்களை நற்செய்திக்கு அழைத்துவர உதவவும் வேண்டுமென்று கூறினார்.

போதுமான பயிற்சி முறைகளை உருவாக்கும் இலக்கு மற்றும் உண்மையான புதுப்பித்தலுடன், தங்களின் மறைப்பணிகள் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பரிந்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கழகத்தின் பணிகளுக்கு நன்றி தெரிவித்து, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.