2016-06-01 17:00:00

திருத்தந்தை : உங்கள் அருள்பணியாளர்களுக்காகச் செபியுங்கள்


ஜூன்,01,2016. இயேசுவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஜூன் மாதத்தில், உங்கள் அருள்பணியாளர்களுக்காக, இயேசுவின் திருஇதயத்திடம் செபியுங்கள் என்று, இப்புதன் பொது மறைக்கல்வியுரையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

ஜூன் 03, வருகிற வெள்ளியன்று திருஅவை, இயேசுவின் திருஇதய விழாவைச் சிறப்பிக்கின்றது, இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இவ்விழா, அருள்பணியாளர்களின் யூபிலி விழாவால் சிறப்படைகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

உங்கள் அருள்பணியாளர்கள் மீதான உங்கள் அன்பையும், ஆதரவையும், பாசத்தையும் வெளிப்படுத்தி, அவர்களுக்காக இந்த ஜூன் மாதம் முழுவதும் இயேசுவின் திருஇதயத்திடம் செபிக்கக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இதன் வழியாக, அருள்பணியாளர்கள், இரக்கம்நிறை அன்பால் முழுவதும் நிறைந்த திருஇதயத்தை, தங்கள் வாழ்வில் எப்போதும் பிரதிபலிக்க இயலும் என்றும் கூறினார்.

1856ம் ஆண்டில், திருத்தந்தை 9ம் பத்திநாதர் அவர்கள், இயேசுவின் திருஇதய விழாவை ஏற்படுத்தியதன் 160ம் ஆண்டு நிறைவில், தற்போது அருள்பணியாளர்களின் யூபிலி விழா சிறப்பிக்கப்படுகின்றது.

மேலும், ஆயிரக்கணக்கான அருள்பணியாளர்கள் மற்றும் குருத்துவ மாணவர்கள், அருள்பணியாளர்களின் யூபிலி விழாவை, இப்புதனன்று உரோமையில் தொடங்கியுள்ளனர். இவ்வியாழனன்று, உரோம் நகரின் புனித பவுல், புனித மேரி மேஜர், புனித ஜான் இலாத்தரன் ஆகிய மூன்று பாப்பிறை பசிலிக்காக்களில், அருள்பணியாளர்கள் மற்றும் குருத்துவ மாணவர்களுக்கு, “அருள்பணியாளர் இரக்கத்தின் திருப்பணியாளர்” என்ற தலைப்பில், மூன்று தியான உரைகள் வழங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இந்த உரைகள், காலை 9.30, 11, மற்றும் பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும். இந்த யூபிலி விழாவின் நிறைவாக, ஜூன் 03, வெள்ளியன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.