2016-05-31 15:23:00

திருத்தந்தை : கிறிஸ்தவர்கள் மகிழ்வோடு பணிபுரிபவர்கள்


மே,31,2016. கிறிஸ்தவர்கள், தாமதம் மற்றும் தயக்கமின்றி மற்ற மக்களுக்குப் பணிபுரிய வேண்டும், இவ்வாறு செயல்பட கற்றுக்கொண்டால், இந்த உலகம் மிகவும் வித்தியாசமான இடமாக மாறும் என்று இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய கன்னி மரியா, எலிசபெத்தைச் சந்தித்த விழா நாளான மே 31, இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, தூய கன்னி மரியா, எலிசபெத் அவர்களுக்கு உதவச் சென்றதை வைத்து மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார்.

16 அல்லது 17 வயது நிரம்பிய கன்னி மரியா, கருவுற்றிருந்த நிலை, வழிப்பயணத்தில் திருடர்கள் ஆபத்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், கருவுற்றிருந்த உறவினர் எலிசபெத்திற்கு, எவ்வித தயக்கமுமின்றி, உடனடியாக உதவச் சென்றது பற்றி நற்செய்தி (லூக்.1:39-56) விளக்குகிறது என்றுரைத்த திருத்தந்தை, மரியா மிகவும் துணிச்சலுடன் செயல்பட்டார் என்றார்.

கன்னி மரியா, எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வைக் கொண்டாடும் திருவழிபாடு, நல்ல காற்று நம் வாழ்வை நிறைப்பதுபோல், முழுவதும் மகிழ்வு நிரம்பியது என்றும் கூறினார் திருத்தந்தை.

முகச்சுளிப்புடனும், முகவாட்டத்துடனும் கிறிஸ்தவர்கள் இருப்பது வெறுக்கத்தக்கது என்றும், இத்தகையவர்கள் முழுமையான கிறிஸ்தவர்கள் அல்லர் என்றும் கூறிய திருத்தந்தை, கிறிஸ்தவர்களுக்கு, முதலில் சேவை மனப்பான்மை அல்லது பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தேவை என்று கூறினார்.

திருஅவையில் உள்ள துணிச்சல்மிக்க பெண்கள் மரியாவைப் போன்றவர்கள், பிறருக்குப் பணிபுரிவது மகிழ்வை அளிப்பது என்றும், பிறருக்குப் பணிபுரியவும், பிறருக்கு உதவிக்கரம் நீட்டவும் நாம் கற்றுக்கொண்டால் இந்த உலகம் எப்படியெல்லாம் மாறும் என்றும் தனது மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.