2016-05-31 15:52:00

ஆப்ரிக்கர்கள் தாக்கப்படுவதற்கு இந்திய ஆயர்கள் கண்டனம்


மே,31,2016. புதுடெல்லியில், ஆப்ரிக்கர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து, தங்களின் கண்டனத்தை வெளியிட்டுள்ள இந்திய ஆயர்கள், இது, இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளனர்.

இந்தியாவில், ஆப்ரிக்கர்களும், எந்த ஒரு வெளிநாட்டவரும் நன்மதிப்புக்குரிய விருந்தாளிகளாக நடத்தப்பட வேண்டியவர்கள் என்றும், இதுவே இந்தியக் கலாச்சாரம் என்றும் கூறியுள்ளார் இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் ஆயர் தியோதோர் மஸ்கரனாஸ்.

இந்தியர்களும் பிற நாடுகளில் குடியேற்றதாரர்களாக வாழ்கின்றனர் என்றும், இத்தகைய தாக்குதல்கள், எதிர்த் தாக்குதல்களுக்கு இட்டுச் செல்லும் என்றும், ஆயர் மஸ்கரனாஸ் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இம்மாதம் 20ம் தேதி, புதுடெல்லியில், ரிக்ஷாவை வாடகைக்கு எடுப்பது தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாதத்தில், காங்கோவைச் சேர்ந்த Masonda Ketada Olivier என்பவர் அடித்தே கொல்லப்பட்டார். இவர், புதுடெல்லியில், ஒரு தனியார் நிறுவனத்தில் ப்ரெஞ்ச் மொழி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவ்விவகாரம் தொடர்பாக, காங்கோ நாட்டில் வாழும் சில இந்தியர்களின் கடைகள் தாக்கப்பட்டன மற்றும் சிலர் காயமடைந்தனர்.

கடந்த பிப்ரவரியில், டான்சானியா நாட்டு மாணவர் ஒருவர் பெங்களூருவில் கடுமையாய்த் தாக்கப்பட்டார்.  

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.