2016-05-24 10:29:00

இது இரக்கத்தின் காலம் : நீர் என்னைத் தொட்டீர், நான் நலமானேன்


53 வயதான வின்சியோ ரீவா (Vincio Riva) என்ற இத்தாலியருக்கு, 2013ம் ஆண்டு, நவம்பர் 6ம் தேதி, அவர் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக அமைந்தது. அன்று, அவர், தன் அத்தை கேத்தரீனா அவர்களுடன், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை வழங்கிய புதன் மறைகல்வி உரையில் கலந்துகொள்ள வந்திருந்தார்.

அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வின்சியோ அவர்களை அணைத்து, முத்தமிட்டு, ஆசீர் வழங்கிய காட்சி, உலக ஊடகங்களில் ஆழமான பாதிப்புக்களை உருவாக்கியது. காரணம் என்ன? வின்சியோ அவர்கள், ஓர் அரிய நோயால் பாதிக்கப்பட்டு, முகமெங்கும் கொப்பளங்கள் நிறைந்த விகாரத்தோற்றம் கொண்டவர். 15 வயதில் இந்த நோயால் தாக்கப்பட்ட வின்சியோவைக் கண்டதும் ஒதுங்கிச் செல்வோர் மட்டுமே அதிகம். அந்த நோய்க்குப் பின், தன் தந்தையும் தன்னை அணைத்ததில்லை என்று வின்சியோ அவர்கள் ஊடகங்களிடம் கூறினார்.

புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தையின் ஆசீரை தூரத்திலிருந்து பெறுவோம் என்ற நம்பிக்கையில் அவர் அங்கு வந்தார். ஆனால், அவரைக் கண்டதும், திருத்தந்தை, முகத்தோடு முகம் வைத்து, அணைத்து முத்தமிட்டது, அவரை ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஒரு வார்த்தையும் சொல்லாமல் நிகழ்ந்த இந்த அணைப்பைக் குறித்து, வின்சியோ அவர்கள் பேட்டியளித்தபோது, "நான் விண்ணகத்தில் இருந்ததைப்போல் உணர்ந்தேன். என் உள்ளத்திலிருந்து பெரியதொரு பாரம் கரைந்ததைப் போல் இருந்தது. இறைவன் என்னைக் காக்கின்றார் என்ற உறுதியுடன், நான் இனி என் வாழ்வைத் தொடர முடியும்" என்று கூறினார்.

சில நிமிடங்களே நீடித்த அந்தச் சந்திப்பைக் குறித்து பேசிய அவரது அத்தை கேத்தரீனா அவர்கள், "திருத்தந்தை அவர்கள், வின்சியோவை அணைத்து நின்றதைக் கண்டபோது, அவர், அவரை விட்டுவிடப் போவதில்லை என்பதை உணர முடிந்தது" என்று கூறினார்.

'நீர் என்னைத் தொட்டீர், நான் நலமடைந்தேன்' என்று இறைவனிடம் நாம் கூறும் வார்த்தைகள், நினைவில் நிழலாடுகின்றன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.