2016-05-19 15:29:00

திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் நினைவாக புது ஆலயம்


மே,19,2016. திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களின் பிறந்தநாளையொட்டி, போலந்து அரசுத் தலைவர், மற்றும், மக்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதன் மறைகல்வி உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

1920ம் ஆண்டு மே 18ம் தேதி, போலந்து நாட்டின் Wadowice என்ற ஊரில் பிறந்த திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் 96வது பிறந்தநாள் நினைவாக, அந்நாட்டின் Toruń என்ற இடத்தில் புனித 2ம் ஜான்பால் நினைவாக திறக்கப்பட்ட ஓர் ஆலயத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.

புதியவழியில் நற்செய்தியை அறிவிப்பதற்கு விண்மீனாக விளங்கும் அன்னை மரியா நினைவாகவும், திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் நினைவாகவும், எழுப்பப்பட்டுள்ள புதிய ஆலயத்தின் அர்ச்சிப்பை, திருத்தந்தையின் சார்பில், கர்தினால் Zenon Grocholewski அவர்கள் நிகழ்த்தினார்.

புதிய ஆலயத்தில் புனிதக் கதவை திறந்துவைத்த கர்தினால் Grocholewski அவர்கள், நம் நம்பிக்கையை வளர்ப்பதற்கும், இறைவனுக்கு நன்றி சொல்வதற்கும் மற்றுமொரு வாய்ப்பினை, இறைவன், இன்று வழங்கியுள்ளார் என்று கூறினார்.

2012ம் ஆண்டு இவ்வாலயத்தின் கட்டுமானப் பணிகள் துவங்கின என்றும், வத்திக்கான், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்திலிருந்து எடுத்துவரப்பட்ட ஒரு கல், இந்த ஆலயத்தின் ஒரு சுவரில் பதிக்கப்பட்டுள்ளது என்றும், போலந்து ஆயர் பேரவை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.