2016-05-18 15:43:00

ஆயுத மோதல்களால் அப்பாவி மக்கள் பலி - ஐ.நா.அவை


மே,18,2016. பொதுமக்களைக் காப்பதற்கென, கடந்த 150 ஆண்டுகளாக மனித சமுதாயம் மேற்கொண்ட பல கடினமான முயற்சிகளை, அண்மைய ஆயுத மோதல்கள் அழித்து வருகின்றன என்று ஐ.நா.அவை கூறியுள்ளது.

மே 23,24 ஆகிய இரு நாட்கள், துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெறும் 'மனிதாபிமான உலக உச்சி மாநாட்டை'யொட்டி, ஐ.நா. அவை எழுப்பிவரும் கேள்விகளில், இன்றைய ஆயுத மோதல்களால், அப்பாவி மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள், ஒரு முக்கியக் கேள்வியாக முன்வைக்கப்பட்டுள்ளது.

போர்ச் சூழல்களில் கடைபிடிக்கப்படவேண்டிய தார்மீகக் கடமைகளைத் துச்சமாக மதிக்கும் ஒரு சில குழுக்களால், இந்நிலை, ஒரு தொற்றுநோய் போல அனைத்து தரப்பினரையும் பாதித்து, பொதுமக்களைப் பலி கொடுக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.

உலகின் 125 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த உச்சி மாநாட்டில், பொதுமக்களின் பாதுகாப்பு, ஆயுத மோதல்களால் துன்புறும் கோடிக்கணக்கான மக்களுக்கு உதவி ஆகியவை முதலிடம் பெறவேண்டும் என்று, ஐ.நா.அவை விண்ணப்பித்துள்ளது.

அண்மைய ஆண்டுகளில், ஆயுத மோதல்களின் விளைவாலும், நிலக்கண்ணி வெடிகள் போன்ற ஆபத்துக்களாலும் கொல்லப்பட்டவர்களில் 92 விழுக்காட்டினர், ஆயுதம் ஏதுமற்ற அப்பாவி மக்கள் என்ற புள்ளிவிவரத்தை ஐ.நா. அவை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.