2016-05-18 15:17:00

அச்சமின்றி போலந்து நாட்டுக்கு வரும்படி இளையோருக்கு அழைப்பு


மே,18,2016. போலந்து நாட்டில் பாதுகாப்பு பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றும், எனவே, உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் பங்கேற்க எவ்வித தயக்கமும் இன்றி இளையோர் வரவேண்டும் என்றும், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர், கர்தினால் ஸ்டானிஸ்லாவ் ஜீவிஷ் (Stanislaw Dziwisz) அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூலை மாதம் 26ம் தேதி முதல், 31ம் தேதி முடிய, போலந்து நாட்டின் கிராக்கோவ் மாநகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் பங்கேற்க, பாதுகாப்பு கருதி தயக்கம் காட்டி வரும் இளையோருக்கு, கர்தினால் ஜீவிஷ் அவர்கள் சிறப்பான அழைப்பை விடுத்துள்ளார்.

உலக இளையோர் நாள் என்ற எண்ணத்திற்கு வித்திட்ட திருத்தந்தை, புனித 2ம் ஜான்பால் அவர்கள் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு இளையோரை அழைத்துள்ள கர்தினால் ஜீவிஷ் அவர்கள், "அஞ்சாதீர்கள்" என்ற விருதுவாக்கை, புனித 2ம் ஜான் பால் அவர்கள், இளையோரிடம் அடிக்கடி கூறிவந்ததை, நினைவுபடுத்தியுள்ளார்.

உலக இளையோர் நாள் நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால்  ஜீவிஷ் அவர்கள், இதுவரை 182 நாடுகளிலிருந்து இளையோர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் என்றும், இனி வரும் நாட்களில் பதிவு செய்யும் இளையோரின் எண்ணிக்கை கூடும் என்றும் தெரிவித்தார்.

சென்ற ஆண்டு பாரிஸ் மாநகரிலும், இவ்வாண்டு பிரஸ்ஸல்ஸ் நகரிலும் நடைபெற்ற தாக்குதல்களால் இளையோர் நடுவே தயக்கம் கூடியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் ஜீவிஷ் அவர்கள், ஐரோப்பாவிலும், உலகிலும் அமைதியை உருவாக்குவது இளையோர் பணி என்பதையும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.