2016-05-14 14:35:00

இயேசுவின் விழுமியங்களுக்காக கிறிஸ்தவர்கள் போராட வேண்டும்


மே,14,2016. சிங்கப்பூர் குடிமகன் என்று பெருமையாகச் சொல்வதென்பது, சிங்கப்பூர் தலைநிமிர்ந்து நிற்பதற்காக உழைப்பதாகும், அதேபோல், கத்தோலிக்கர் என்று பெருமைப்படுவது என்பது, இயேசுவுக்காக உழைப்பதாகும் என, அந்நாட்டுப் பேராயர் கூறினார்.

இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் தூய ஆவியார் பெருவிழாவுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், சிங்கப்பூர் திருஅவை எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும், பல விசுவாசிகள் தங்களின் கடமைகளையும், பொறுப்புக்களையும் மறந்து வாழ்வது பற்றியும் எழுதியுள்ளார் சிங்கப்பூர் பேராயர் வில்லியம் கோ.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், நற்செய்தியின் பரிவன்பு மற்றும் மன்னிப்பு  மதிப்பீடுகளை விசுவாசிகள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும், தீர்ப்பிடுவதில் தீவிரம் காட்டக் கூடாது என்றும் கேட்டுள்ளார் பேராயர் வில்லியம் கோ.

இயேசுவின் விழுமியங்களுக்காக கிறிஸ்தவர்கள் போராட வேண்டும் மற்றும் இயேசு குறித்து பெருமைப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் சிங்கப்பூர் பேராயர் வில்லியம் கோ.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.