2016-05-12 15:04:00

மாறுபட்ட வழியில் சிந்திக்க, வாழ, துறவியருக்கு அழைப்பு


மே,12,2016. "அன்புத் துறவியரே, உலகை விழித்தெழச் செய்யுங்கள்! மாறுபட்ட வழியில் சிந்திக்க, செயல்பட, வாழ, ஒரு சாட்சியாகத் திகழுங்கள்!" என்ற அழைப்பினை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இருபால் துறவியருக்கு தன் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழனன்று விடுத்தார்.

"நாம் எதைச் சொல்கிறோம், அதை எப்படிச் சொல்கிறோம், அதாவது, நம் ஒவ்வொரு சொல்லும், அதைச் சொல்லும் விதமும் இறைவனின் பரிவை, கனிவை, மன்னிப்பை வெளிப்படுத்துவதாக அமையவேண்டும்" என்ற அறிவுரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் இப்புதனன்று வெளியானது.

மேலும், மே 16, வருகிறத் திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய ஆயர் பேரவையின் 69வது பொது அமர்வைத் துவக்கிவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 16, மாலை, 4.30 மணிக்கு, வத்திக்கானில் அமைந்துள்ள ஆயர்கள் மாமன்ற அரங்கத்தில், திருத்தந்தை வழங்கும் உரையுடன் துவங்கும் இந்தப் பொது அமர்வு, மே 19, வியாழன் முடிய நீடிக்கும் என்று, இத்தாலிய ஆயர் பேரவையின் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.