2016-05-10 16:02:00

பிலிப்பைன்ஸ் புதிய அரசுத்தலைவருக்கு ஆயர்கள் ஒத்துழைப்பு


மே,10,2016. பிலிப்பைன்சில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுத்தலைவருடன் மிகவும் கவனத்துடன் ஒத்துழைப்போம் என்று, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் அவர்கள் கூறியுள்ளார்.

எந்த ஓர் அரசுக்கும் திருஅவை வழங்கும் மாபெரும் வாக்குறுதி, விழிப்புடன் இருந்து ஒத்துழைத்தல் எனவும், பொது மக்களும், அரசுடன் சேர்ந்து அனைவரின் நன்மைக்காக உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் பேராயர் வியேகாஸ்.

இத்திங்களன்று நடந்த தேர்தல் முடிவுகள், கடவுளின் விருப்பத்தின்படி உள்ளன என்றும், இத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், தங்களின் வெற்றி ஆண்டவரால் நிகழ்ந்துள்ளது என்பதை விரைவில் உணர்வார்கள் என்றும் கூறினார் பேராயர் வியேகாஸ்.

இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள Rodrigo Duterte அவர்கள், தீமைக்கும், மோசமானவர்களுக்கும் எதிராக, சர்வாதிகாரியாக செயல்படுவேன் எனத் தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.