2016-05-09 15:40:00

மாய பிம்பங்களாக அல்ல, மெய் நிலையினராக மாற்றுபவர் தூய ஆவியே


மே,09,2016. மாயபிம்பங்களாக அல்ல, மாறாக, மெய் நிலையினராக நம்மை மாற்றி, விடுதலையின் பாதையை நமக்குக் கற்றுத்தரும் தூய ஆவியானவரை நோக்கிச் செல்வோம் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையை வழிநடத்திச் செல்லும் தூய ஆவியானவரைக் குறித்து பல கிறிஸ்தவர்கள் இன்று தெரிந்து வைத்திருக்கவில்லை, பலர் அவரைக் குறித்து முழுமையாக கேள்விப்பட்டதுகூட இல்லை என்று கூறினார்.

மூவொரு கடவுளுள் ஒருவர் தூய ஆவியானவர் என தங்கள் மறைக்கல்வியின் வழியாக அறிய வந்துள்ள கிறிஸ்தவர்கள்கூட அதற்கு மேல் எதையும் தெரிந்து வைத்திருக்கவில்லை எனவும் கூறிய திருத்தந்தை, திரு அவையை வழிநடத்திச் செல்லும் தூய ஆவியானவர், அதற்குள் செயலாற்றுவது மட்டுமல்ல, நம் இதயங்களுக்குள்ளும் செயலாற்றி, நம்மை ஒரே குடும்பமாக இணைக்கிறார் என்றார். நமக்கெனக் கதவுகளைத் திறந்து, நம்மை இயேசுவின் சாட்சிகளாக அனுப்புபவர் அவரே  எனவும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனைப் புகழவும், செபிக்கவும் நம்மை நடத்திச் செல்லும் தூய ஆவியானவரே, தந்தையைக் காணவும் நமக்குக் கற்றுத்தருகிறார் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மை அநாதை எனும் நிலையிலிருந்து விடுவித்து, தந்தையாம் இறைவனை நோக்கி 'அப்பா, தந்தாய்' என அழைக்க உதவுபவரும் தூய ஆவியானவரே எனவும் கூறினார்.

நமக்குள்ளேயே இருந்து செயலாற்றும் தூய ஆவியானவர், நம்மை மாயபிம்பங்களாக அல்ல, மாறாக மெய்நிலையினராக மாற்றுகிறார் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.