2016-05-06 15:58:00

துன்ப நேரங்களில் யாருமே ஒருபோதும் தனியாக இல்லை


மே,06,2016. இவ்வுலகில், ஒவ்வொரு நொடியிலும் சிந்தப்படும், கண்ணீர் ஒவ்வொன்றும், மாறுபட்டதாய் இருந்தாலும், அக்கண்ணீர் அனைத்தும், இரக்கத்திற்கும், பரிவன்பிற்கும், ஆறுதலுக்கும் அழுகுரல் எழுப்பும் துன்பப் பெருங்கடலாக உள்ளன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

"கண்ணீரைத் துடையுங்கள்" என்ற மையக் கருத்துடன், இவ்வியாழன் மாலையில் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெற்ற திருவிழிப்பு வழிபாட்டில் இவ்வாறு மறையுறையாற்றிய திருத்தந்தை, துன்ப நேரங்களில் நாம் கண்ணீர் சிந்தினாலும், நாம் ஒருபோதும் தனியாக இல்லை என்றும் கூறினார்.

துன்பத்தில் நாம் கண்ணீர் சிந்தும் நேரங்களில், கடவுளின் பிரசன்னம் நமக்கு அருகில் இருக்கின்றது என்பதை நாம் உணரலாம் என்றும், கடவுளின் கனிவு, நம்மைத் தேற்றுகின்றது மற்றும் அவரின் வார்த்தையின் வல்லமை, நமக்கு ஆதரவும், நம்பிக்கையும் அளிக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒரு நிகழ்வாக நடைபெற்ற இத்திருவழிபாட்டில், துயரங்களைச் சந்தித்த மூன்று பேரின் பகிர்வுகளைக் கேட்ட பின்னர், தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, கண்ணீரில் மிகவும் துன்பம் தருவது, மனிதத் தீமையால் இழைக்கப்படுவது என்றும் கூறினார்.

நம் துன்பங்களில் நாம் தனியாக இல்லையென்றும், தனது அன்புக்குரியவர்களின் இழப்புக்காகக் கண்ணீர் சிந்துவதன் பொருள் என்னவென்று இயேசுவுக்கும் தெரியும் என்றும், இத்திருவழிபாட்டில் கூறிய திருத்தந்தை, இயேசுவால் மட்டுமே இவ்வுலகின் கண்ணீரைத் துடைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இவ்வழிபாட்டில் பகிர்ந்துகொண்ட மூவரில் ஒருவரான, பாகிஸ்தானிய பத்திரிகையாளர்    Qaiser Felix அவர்கள், கத்தோலிக்கர் என்பதற்காக, அடிப்படைவாத  முஸ்லிம்களின் அச்சுறுத்தலை எதிர்நோக்கி, நாட்டை விட்டு வெளியேறி இத்தாலியில் அடைக்கலம் தேடியிருப்பவர். மேலும், தங்கள் மகன் தற்கொலை செய்துகொண்ட துயரத்தினால் பாதிக்கப்பட்ட Pellegrino குடும்பத்தினர், அன்னையின் கண்ணீரால் மனமாறிய இளையவர்களான Maurizio மற்றும் Enzo என்ற இரட்டையர் ஆகியோரும் தங்கள் வாழ்வு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெற்ற இத்திருவழிபாட்டில், கண்ணீரின் அன்னை என்று, இத்தாலியின் Syracuse நகரில் வணங்கப்படும் அன்னை மரியாவின் உருவம், மக்களின் வணக்கத்திற்கென வைக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.