2016-05-05 15:45:00

தென் ஆப்ரிக்கா, ஆயுதங்களுக்கு நிதி ஒதுக்குவது தவறு - ஆயர்கள்


மே,05,2016. தென் ஆப்ரிக்க நாடு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்துவரும் இன்றையச் சூழலில், தென் ஆப்ரிக்க அரசு, படைக் கருவிகளுக்கு அதிக நிதியை ஒதுக்குவது தவறு என்று அந்நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.

தென் ஆப்ரிக்க நாட்டை அதிகம் அச்சுறுத்துவது, அங்கு நிலவும் வறுமை, இளையோருக்கு வேலையில்லா நிலை ஆகியவையே தவிர, அந்நிய நாட்டின் அச்சுறுத்தல்கள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள ஆயர்கள், இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் அதிக நிதியை இராணுவத்திற்கும், படைக் கருவிகளுக்கும் ஒதுக்குவது தவறு என்று கூறியுள்ளனர்.

வேலையற்ற நிலையாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்டுள்ள இளையோரே, நாட்டின் அமைதிக்கு பெரும் ஆபத்தாக மாறக்கூடும் என்று, ஆயர்கள், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

1999ம் ஆண்டு, நாட்டில் HIV நோயினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்ட வேளையில், அதற்குரிய நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்காமல், அன்றைய அரசு, ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டிருந்ததை, ஆயர்கள், அரசுக்கு மீண்டும் நினைவுறுத்தியுள்ளனர். 

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.