2016-05-04 16:08:00

ஐரோப்பிய ஆயர்களுக்கு திருத்தந்தையின் பரிந்துரை


மே,04,2016. ஐரோப்பாவின் பழம்பெரும் கலாச்சாரங்கள் அனைத்தையும் அடிப்படையில் ஒருங்கிணைப்பது கிறிஸ்தவ விசுவாசம் என்பதை ஐரோப்பிய ஆயர்கள் உணரவேண்டும் என திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார் என்று, ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் தலைவர், கர்தினால் பீட்டர் எர்டோ (Peter Erdo) அவர்கள் கூறினார்.

ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த உறுப்பினர்கள், இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தபின்னர், இக்குழுவின் தலைவர், கர்தினால் எர்டோ அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில், இவ்வாறு கூறினார்.

ஐரோப்பிய நாடுகள் தற்போது சந்தித்துவரும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி குறிப்பிட்டத் திருத்தந்தை, ஐரோப்பிய சமுதாயம் தன் கிறிஸ்தவ வேர்களை மீண்டும் கண்டுபிடிப்பது அவசியம் என்பதையும் ஐரோப்பிய ஆயர்களிடம் கூறினார் என்று கர்தினால் எர்டோ அவர்கள் இப்பேட்டியில்  குறிப்பிட்டார்.

பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஐரோப்பா, புலம் பெயர்ந்தோரின் வருகையால் இன்னும் தன் கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று, ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினரும், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் ஆஞ்செலோ பஞாஸ்கோ (Angelo Bagnasco) அவர்கள் தன் பேட்டியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.