2016-04-30 13:38:00

உயிர்ப்புக் காலம் 6ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


விமானம் ஒன்று ஏறத்தாழ 50,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென அதிர்ந்தது. ஒரு பக்கமாகச் சாய்ந்தது. விமானத்தின் இயந்திரம் பழுதடைந்துவிட்டதாக, அதன் ஓர் இறக்கை சிறிது உடைந்துவிட்டதாக பயணிகள் மத்தியில் வதந்திகள் பரவியதால், அவர்களது அச்சம் கூடியது. ஒரு சிலர் கண்களை மூடிக்கொண்டு இருக்கையைக் கெட்டியாகப் பிடித்தபடி அமர்ந்திருந்தனர். வேறு சிலர் தங்களுக்குத் தெரிந்த செபங்களைச் சொல்ல ஆரம்பித்தனர். பல நிமிடங்கள் இந்த நிலை நீடித்ததால், விமானப் பணியாளர்கள் நடுவிலும் கலக்கம் ஏற்பட்டது. ஏறத்தாழ விமானத்தில் இருந்த அனைவரையுமே அச்சம் ஆட்கொண்டது... ஒரே ஒருவரைத் தவிர... ஆம், விமானத்தில் பயணம் செய்த பத்து வயது சிறுமி ஒருவர், எவ்வித பயமுமின்றி ஒரு கார்ட்டூன் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அச்சிறுமி தனியே பயணம் செய்தார் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. அருகில் அமர்ந்திருந்த பெரியவர், அச்சிறுமியிடம், "உனக்குப் பயமாக இல்லையா?" என்று கேட்டார். அதற்கு அச்சிறுமி சிரித்தபடியே, "எனக்குப் பயமே இல்லை... ஏன்னா, எங்க அப்பாதான் இந்த விமானத்தை ஓட்டுகிறார்" என்று பதில் சொன்னார். அனைவரையும் அச்சுறுத்திய ஒரு சூழலில், தன் தந்தையின் மீது அச்சிறுமி கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கை, அச்சிறுமியின் மனதில் அமைதியை விதைத்தது. குழப்பமும், கலக்கமும் மனித வாழ்வில் அடிக்கடி இடம்பெறும் உண்மை. இவற்றின் நடுவே, எது நமக்கு அமைதியைத் தரமுடியும் என்பதைச் சிந்திக்க இந்த ஞாயிறு நமக்கொரு வாய்ப்பை வழங்குகிறது.

யோவான் நற்செய்தி 14: 27

"அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்; மருளவேண்டாம்."  

இறுதி இரவுணவின்போது, இயேசு தன் சீடர்களுக்குத் தந்த பிரியாவிடை செய்தியின் ஒரு பகுதி, இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது. உலகம் தரும் அமைதி, இறைவன் தரும் அமைதி என்ற இரு வேறு துருவங்களைச் சிந்திக்க, இவ்விரு துருவங்களையும் இணைக்க முடியுமா என்பதையும் சிந்திக்க இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

உலகம் தரும் அமைதி என்று சொல்லும்போது, நம்மில் பலர் எண்ணிப்பார்ப்பது, போரும், வன்முறையும் இல்லாத ஒரு நிலை. அமைதி என்ற சொல்லுக்கு உலகத் தலைவர்கள் தரும் ஒரு சில இலக்கணங்கள் இதோ:

"நாடுகளிடையே பீரங்கிகளால் உருவாகும் காயங்கள் தேவையில்லையெனில், சிறு குண்டூசி கொண்டு உருவாகும் காயங்களைத் தவிர்க்க வேண்டும். அதுதான் அமைதிக்கு வழி" என்று சொன்னவர் நெப்போலியன் போனபார்ட்.

அமைதியைப் பற்றி அண்ணல் காந்தி அவர்கள் சொன்ன பல கூற்றுகளில் சிறந்ததொரு கூற்று: "கண்ணுக்குக் கண் என்று வாழ்வதால், உலகமே பார்வை இழந்துவிடும்."

"நாடுகளிடையே உருவாகும் உறவு, அமைதி அல்ல. போரற்ற நிலை அமைதி அல்ல. அமைதி என்பது ஒரு வகை மனநிலை. சலனமற்ற மனநிலையே அமைதியைத் தரும். அமைதி நிறைந்த மனிதர்கள் நடுவில்தான் நிலையான அமைதி வந்து சேரும்." என்று சொன்னவர் ஜவகர்லால் நேரு.

கி.மு. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த Herodotus என்ற கிரேக்கச் சிந்தனையாளர், அமைதி நிறைந்த நாட்டிற்கும், போர் சூழ்ந்த நாட்டிற்கும் இடையே உள்ள ஒரு முக்கிய வேறுபாட்டை இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்: "ஒரு நாட்டில் அமைதி நிலவுகையில், மகன்கள் தங்கள் தந்தையரை அடக்கம் செய்வர். போர்க்காலத்தில், தந்தையர் தங்கள் மகன்களை அடக்கம் செய்வர்."

Herodotus சொல்லிச் சென்ற வார்த்தைகள், மனிதரிடையே வேரூன்ற முடியாமல் தவிக்கும் அமைதியைப்பற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. உள்நாட்டுப் போரினால் கடந்த பல ஆண்டுகள் காயப்பட்டு தவிக்கும் இலங்கையில், சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சில் முள்ளாகத் தைத்து நிற்கின்றன:

“இயற்கை நியதியின்படி, ஒவ்வொரு மரத்திலும் வேர்கள் பூமிக்கடியில் இருக்கும். காய், கனி என்று மரத்தின் பலன்கள் பூமிக்கு மேல் இருக்கும். எங்கள் நாட்டிலோ நாங்கள் பெற்று வளர்த்த கனிகளான எங்கள் பிள்ளைகள் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கின்றனர். வேர்களாகிய நாங்கள் பூமிக்குமேல் உயிரற்று, நடைபிணங்களாகத் திரிகிறோம்” என்று அந்தத் தாய் கூறிய வார்த்தைகள், இலங்கைக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கு இன்று பொருந்தும்.

வேர்கள் பூமிக்கு மேலும், கிளைகள், இலைகள், காய்கள், கனிகள் ஆகிய அனைத்தும் பூமிக்குள்ளும் இருக்கும்படி மரங்களை யாராவது நட்டால், அவரை மதி இழந்தவர் என்று எளிதில் கூறலாம். ஆனால், உலகில் இன்று இதுதானே நடைமுறை வழக்காக உள்ளது. ஆக்கப்பூர்வமான கனிகளை வழங்கவேண்டிய இளையோர், ஒவ்வொரு நாட்டிலும் இராணுவத்தில் பணியாற்றுவதை நாம் எவ்வகையில் நியாயப்படுத்த முடியும்? தலைகீழாக நடப்பட்ட மரங்களைப் போல், மனித சமுதாயத்தை ஒவ்வொரு நாட்டிலும் தலைகீழாக மாற்றிவரும் அரசுகள், தாங்கள் செய்வது மதி இழந்த செயல் என்பதை உணராமல், இராணுவத்திற்கும், போர் கருவிகளுக்கும் செலவழிக்கும் பல இலட்சம் கோடி மதிப்புள்ள தொகையை நியாயப்படுத்தும் போக்கும் அதிகமாகி வருகிறது. நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் படைக்கருவிகளுக்கும், இராணுவப் பராமரிப்புக்கும் செலவிடப்படும் தொகையில் நூற்றில் ஒரு பங்கை மக்கள் முன்னேற்றத்திற்கென ஒவ்வோர் அரசும் செலவிட்டால், உலகின் வறுமையும், பட்டினியும் அறவே ஒழிக்கப்படும் என்று ஐ.நா.போன்ற அமைப்புக்கள் ஆய்வுகள் செய்து, புள்ளி விவரங்களுடன் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

Stockholm International Peace Research Institute (SIPRI) என்பது உலக அமைதியை வலியுறுத்திவரும் ஓர் ஆய்வு மையம். ஒவ்வோர் ஆண்டும் உலகின் அரசுகள் இராணுவத்திற்குச் செலவிடும் தொகையினை இந்த மையம் வெளியிட்டு வருகிறது. இம்மையம் வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையின்படி, உலகின் அனைத்து நாடுகளும் இணைந்து, 2014ம் ஆண்டில் இராணுவத்திற்கு செலவிட்டத் தொகை 1776 பில்லியன் டாலர்கள். அதாவது, 1,77,600 கோடி டாலர்கள். உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் இத்தொகை பிரித்து அளிக்கப்பட்டால், ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு, குறைந்தது, 245 டாலர்கள் கிடைக்கும். பல ஆசிய நாடுகளில், தொழிலாளிகள் பெறும் நாள் கூலி 1 அல்லது 2 டாலர்கள் என்பதை இங்கு நினைவுகூர்வது நல்லது. பொருளாதாரப் பாகுபாடுகளும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளும் ஆழமாக வேரூன்றியிருக்கும் உலகில், அமைதி நிலவுவது அரிது என்று, ஐ.நா.உட்பட பல உலக அமைப்புக்கள் கூறி வருகின்றன. இருப்பினும், அவற்றைப் பொருட்படுத்தாமல், இன்னும் தங்கள் படைபலத்தை நம்பி அமைதியை நிலைநாட்ட விரும்பும் உலக அரசுகள், மதியொடு செயல்படுகின்றனவா என்ற கேள்வி, நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், உலகம் தரும் அமைதி, கல்லறையில் காணப்படும் அமைதி. இந்தக் கல்லறை அமைதிக்கு மாற்றாக, இயேசு காட்டும் அமைதி, ஒரு குறிப்பிட்ட வகையான வாழ்வுமுறை. இந்த வாழ்வு முறையை, தலாய் லாமா அவர்களின் கூற்று இவ்விதம் வலியுறுத்துகிறது: "நம் உள் மனதில் அமைதியைப் பெறாமல், வெளி உலகில் அமைதியைப் பெற முடியாது".

வெளி உலகின் அமைதிக்கென அரசுகள் முயற்சிகள் மேற்கொள்ளாமல் இருப்பதை கண்டனம் செய்வதுடன் நம் பணி முடிந்துவிட்டதென திருப்தி காண்பது, நமக்குப் பழக்கமாகிவிட்டது. ஆனால், இயேசு கூறும் வழி, தலாய் லாமா அவர்கள் சொல்லும் வழி, நாம் தேடித் திரியும் உலக அமைதியை நமக்குள் முதலில் தேடவேண்டும் என்ற சவாலை முன் வைக்கிறது.

"Waging Peace", அதாவது, "அமைதிக்காகப் போரிடுதல்" என்ற தலைப்பில், அருள்பணி Ron Rolheiser அவர்கள் எழுதியுள்ள மறையுரையில், அரசையும், அமைப்பு முறைகளையும் கண்டனம் செய்வதற்குப் பதில், நம் வாழ்வு முறையை ஆய்வு செய்ய அழைப்பு விடுக்கிறார். இதோ அவரது கருத்துக்களில் சில:

"நம் குடும்பங்களில், திருமணங்களில் உறவுகள் முறிந்து, வன்முறைகள் நிலவும்போது, உலக அரசுகள் நடுவே, வன்முறையற்ற உறவுகள் நிலவவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. நம் வாழ்வில் ஏற்பட்ட பழையக் காயங்களை மன்னித்து, முன்னோக்கிச் செல்ல மனமில்லாதபோது, நாடுகளிடையே உருவான வரலாற்றுக் காயங்களை மறந்து, அரசுத் தலைவர்கள் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. நம் குடும்பங்களில், சுற்றங்களில், நமக்கு அடுத்திருக்கும் சூழல்களில் உண்மையானத் தேவைகள் உள்ளன என்பதை நன்கு அறிந்தபோதிலும், நம் உடல் தோற்றம், முக அழகு என்ற வெளிப்பூச்சுக்களுக்கு நாம் அதிகம் செலவழிக்கிறோம். இந்நிலையில், அரசுகள், உலக அரங்கில் தங்கள் வெளித் தோற்றத்தைப் பாதுகாக்க, இராணுவத்திலும், படைக் கருவிகளிலும் செலவு செய்வதை நாம் கேள்வி கேட்கக் கூடாது.

எனவே, "அமைதிக்காகப் போரிடுதல்" என்பது, அரசுகள் என்ன செய்யவேண்டும், செய்யக் கூடாது என்பனவற்றில் ஆரம்பமாவதில்லை. நாம் வளர்த்துக்கொள்ளும் பேராசை, மன்னிக்க மறுக்கும் மனநிலை, அணியவிரும்பும் முகமூடிகள் ஆகியவற்றில் ஆரம்பமாகவேண்டும். நம்மைச் சூழ்ந்துள்ள அரசுகள், நிறுவனங்கள், அமைப்பு முறைகள் ஆகியவற்றில் மாற்றங்கள் நிகழவேண்டும் என்பதைவிட, நம்மில் மாற்றங்கள் நிகழவேண்டும் என்பதே முக்கியம்."

"இவ்வுலகில் நீ காணவிழையும் மாற்றங்கள், முதலில் உன்னில் நிகழட்டும்" "Be the change that you wish to see in the world" என்று, மகாத்மா காந்தி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. நம்மிடம் ஆரம்பமாகும் மாற்றங்களுக்கு அடித்தளமாக இருக்கவேண்டிய சக்தி என்ன என்பதை விளக்க, அருள்பணி Ron Rolheiser அவர்கள் ஒரு சிறு நிகழ்வைக் கூறுகிறார்:

இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்தபோது, நார்வே நாட்டைச் சேர்ந்த லூத்தரன் சபை போதகர் ஒருவரை, நாத்சி படையினர் கைது செய்து, விசாரணை அதிகாரிக்கு முன் நிறுத்தினர். விசாரணையைத் துவங்குவதற்கு முன், அதிகாரி, தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மேசை மீது வைத்து, "போதகரே, இந்த விசாரணையின் தீவிரத்தை உங்களுக்கு உணர்த்தவே நான் இதை மேசைமீது வைத்தேன்" என்று கூறினார். உடனே, போதகர், தான் வைத்திருந்த விவிலியத்தை அந்தத் துப்பாக்கிக்கு அருகே வைத்தார். "ஏன் இவ்வாறு செய்தீர்?" என்று அதிகாரி கேட்டதும், போதகர், "நீங்கள் உங்களிடம் இருந்த ஆயுதத்தை எனக்கு முன் வைத்தீர்... நானும் அதேபோல் செய்தேன்" என்று அமைதியாகப் பதில் சொன்னார்.

உலகில் அமைதி நிலவ, அரசுகள் போர்கருவிகளை நம்புகின்றன. ஆனால் அந்த அமைதி நமக்குள்ளிருந்து பிறக்க வேண்டும் என்பதை உணரும் நாம், நம்மிடம் உள்ள சிறந்த கருவியான விவிலியத்தை, நற்செய்தியை முன்னிறுத்த அழைக்கப்பட்டுள்ளோம். நாம் காண விழையும் அமைதியை இயேசு வழங்குவதாக வாக்களித்துள்ளார்:

யோவான் நற்செய்தி 14: 27

"அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்; மருளவேண்டாம்."

நமக்குள் எப்போது அமைதி உருவாகும்? நம்முள் பிளவுபட்டிருக்கும் பல பகுதிகள் ஒன்றிணைந்து வரும்போது அமைதி உருவாகும். நமது உள் உலகம், வெளி உலகம் என்ற விமானங்கள் நிலைதடுமாறி, தாறுமாறாகப் பறந்தாலும், அந்த விமானங்களை இயக்குபவர், தந்தையாம் இறைவன் என்பதை நாம் ஒவ்வொருவரும் நம்பி ஏற்றுக்கொண்டால், தடுமாற்றங்கள் மத்தியிலும் உண்மை அமைதியை நாம் உணர முடியும்.

உண்மையையும், நீதியையும் நிலைநாட்ட தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து, அதற்காக தன் உயிரையும் இழந்த மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள், அமைதியைப் பற்றி சொன்ன வார்த்தைகளுடன் இன்றைய நம் சிந்தனைகளை நாம் நிறைவு செய்வோம்:

I refuse to accept the view that mankind is so tragically bound to the starless midnight of racism and war that the bright daybreak of peace and brotherhood can never become a reality... I believe that unarmed truth and unconditional love will have the final word. - Martin Luther King, Jr.

"இனவெறி, போர் என்ற இருளுக்குள் மனித சமுதாயம் புதைந்துவிட்டது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அமைதியும், சகோதர அன்பும் உதயமாகும் காலைப்பொழுது புலரும் என்பதை நான் எதிர்பார்க்கிறேன். எவ்வித படைக்கருவியையும் பயன்படுத்தாமல் சொல்லப்படும் உண்மையும், நிபந்தனையற்ற அன்புமே இறுதியில் நிலைக்கும் என்பதை நான் நம்புகிறேன்."

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.