2016-04-29 15:03:00

பொம்பெய் மறைமாவட்ட மாணவர்க்கு திருத்தந்தை கடிதம்


ஏப்.29,2016. “இயேசு தீமையின் ஆணிவேரையே வெற்றி கண்டுள்ளார்;அவரே மீட்பின் வாயில்; ஒவ்வொரு மனிதரும் அந்த வாயிலில் இரக்கத்தைக் கண்டுணரும்பொருட்டு, அது அகலத் திறந்து வைக்கப்பட்டுள்ளது” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இத்தாலியின் பொம்பெய் நகரில், 21வது அமைதி நாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் பள்ளி மாணவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை, நன்மை செய்யவும், விசுவாசத்தில் வாழவும், எல்லாவற்றுக்கும் மேலாக, சக மாணவர்கள், இயேசுவுக்குத் தங்கள் இதயங்களைத் திறப்பதற்கு உதவவும் மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். இம்மாணவர்களோடு ஆன்மீக முறையில் தான் ஒன்றித்திருப்பதாகவும், தனக்காகச் செபிக்க வேண்டுமெனவும் அதில் கூறியுள்ளார் திருத்தந்தை.

அமைதி மற்றும் இறைஇரக்கம் பற்றிய கவிதைகள், ஓவியங்கள் மற்றும் சிந்தனைகளை, இம்மாணவர்கள் திருத்தந்தைக்கு அனுப்பியிருந்தனர். இதற்கு இவ்வாறு  பதில் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட செயலகத்தின் பொது விவகாரத்துறையின் நேரடிப் பொதுச் செயலர் பேரருள்திரு Angelo Becciu அவர்கள், இக்கடிதத்தை, திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.