2016-04-18 15:34:00

திருத்தந்தை : வாழ்வின் பாதையில், இயேசுவைப் பின்செல்லுங்கள்


ஏப்.18,2016. வாழ்வின் பாதையில், இயேசுவைப் பின்செல்லுங்கள்  என்றும், எதிர்காலம் பற்றிச் சொல்லும் ஜோதிடர்களையும், காட்சி காண்பதாகச் சொல்லிக் கொள்பவர்களையும் நம்பாதீர்கள் என்றும், இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலை நிறைவேற்றிய திருப்பலியில், நல்ல ஆயரின் குரல் (யோவா.10,1-10) பற்றிய சிந்தனைகளை மையமாக வைத்து வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு நாளின் வாழ்விலும், நாம் பின்செல்லவேண்டிய பாதையில், இயேசுவே வாயிலாக இருக்கிறார், இயேசு என்ற இந்த வாயிலைத் தவிர, வேறு வழியே கிடையாது என்றும், வேறு பாதையைப் பயன்படுத்துவோர் திருடர் மற்றும் கொள்ளையர் என்றும் கூறினார் திருத்தந்தை.  

நாம் எப்போதுமே இயேசுவின் பெயரில் தீர்மானங்கள் எடுக்கின்றோமா? என்று நம்மை நாமே கேள்வி கேட்போம் என்றும், இயேசுவைப் பின்தொடர்பவர் தவறிழைக்க மாட்டார் என்றும், ஆயர், தனது மந்தையை அறிந்து அவற்றை வழிநடத்துவார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசுவின் குரலை, பேறுபெற்றோர் பற்றிக் கூறும் அவரின் மலைப்பொழிவில் கேட்கலாம் என்றும், கிறிஸ்தவ வாழ்வு, உண்மையிலேயே மிகவும் எளிதானது, இயேசுவே நம் வாயில், அவர் நம் பாதையை வழிநடத்துகிறார், அவரின் குரலுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும் என்றும், இத்திங்களன்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.