2016-04-18 15:52:00

11 புதிய அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தை திருப்பொழிவு


ஏப்.18,2016. இறையழைத்தலுக்காகச் செபிக்கும் 53வது உலக இறையழைத்தல் ஞாயிறாகிய, இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், 11 இளம் தியாக்கோன்களை, அருள்பணியாளர்களாகத் திருப்பொழிவு செய்து நிறைவேற்றிய திருப்பலியில், அவர்கள் தங்களின் வரலாற்றை நினைவில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புதிய அருள்பணியாளர்கள், தங்களின் அன்னையர் மற்றும் பாட்டிமார்களிடமிருந்தும், வேதியர்கள் மற்றும் உலகளாவியத் திருஅவையிடமிருந்தும் பெற்ற ஆண்டவரின் வார்த்தை எனும் கொடையையும் நினைத்துக் கொள்ளுமாறும் கூறினார் திருத்தந்தை.

கிறிஸ்துவின் இறப்பைத் தங்களில் தாங்கி, வாழ்வின் புதுமைத் தன்மையில் கிறிஸ்துவோடு உடன்நடக்குமாறும் அழைப்பு விடுத்த திருத்தந்தை, சிலுவையின்றி, உண்மையான கிறிஸ்துவை ஒருபோதும் கண்டு கொள்ள முடியாது என்றும், இயேசு இல்லாத சிலுவைக்கு அர்த்தமே இல்லை என்றும் கூறினார்.

புதிய அருள்பணியாளர்களே, நீங்கள் இரக்கமுள்ளவர்களாக, மிக மிக இரக்கமுள்ளவர்களாக வாழுமாறு, ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் பெயரால், திருஅவையின் பெயரால் விண்ணப்பிக்கிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். நீங்கள் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், இதை மறக்க வேண்டாம், ஆண்டவர் ஒருவர் ஒருவராக உங்களை அழைத்துள்ளார் என்றும், மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.