2016-04-16 16:33:00

இது இரக்கத்தின் காலம் : ஒரு தலைவருக்குத் தேவையான பண்புகள்


மாவீரர் அலெக்சாண்டர் ஒருமுறை தன் படையுடன் மக்ரான் என்ற பாலைநிலத்தைக் கடக்கவேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலும், எரிக்கும் மணலும் வீரர்களின் உயிரைக் குடிக்கும் தீயாய் மாறின. அலெக்சாண்டரும் தாகத்தால் துடித்தார். மன்னரின் தாகத்தை அறிந்த இரு தளபதிகள் பல இடங்களில் அலைந்து, அவ்வழியே சென்ற பயணிகளிடம் கெஞ்சி மன்றாடி, தங்கள் தலைக்கவசத்தில் சிறிது தண்ணீர் கொண்டுவந்தனர். அத்தளபதிகளின் விசுவாசத்தை அலெக்சாண்டர் பாராட்டினார். பின்னர், அவர்களிடம், "வீரர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி உண்டா?" என்று கேட்க, அவர்கள், "இல்லை மன்னா. உங்கள் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது" என்று சொன்னார்கள். அலெக்சாண்டர் கவசத்தைக் கையில் எடுத்தார். வீரர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தனர். வீரர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது, தனக்கும் தண்ணீர் தேவையில்லை என்று சொல்லியபடி, கவசத்தில் இருந்த நீரை மணலில் ஊற்றினார், அலெக்சாண்டர். துன்பம் என்று வந்தால், தங்களுடன் தலைவனும் சேர்ந்து துன்புறுவார் என்பதை உணர்ந்த வீரர்கள், தங்கள் தலைவனைப் பெருமையுடன் எண்ணி ஆர்ப்பரித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.