2016-04-12 16:00:00

“அன்பின் மகிழ்வு” மடல், ஆசியத் திருஅவைக்கு மாபெரும் கொடை


ஏப்.12,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், “அன்பின் மகிழ்வு(Amoris Laetitia)” திருத்தூது அறிவுரை மடல், ஆசியச் சமுதாயத்திற்கும், குடும்பங்களுக்கும், ஆசியத் திருஅவைக்கும் மாபெரும் கொடை என்று கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரும், இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவைத் தலைவரும், மும்பைப் பேராயருமான கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இம்மடல் வெளிவந்திருப்பதால், இது இன்னும் சிறந்த கொடையாக உள்ளது என்று கூறினார்.

அன்பின் மகிழ்வு மடல் குறித்து, ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்தியத் தலத்திருஅவைக்கு இது விலைமதிப்பில்லாத கொடை என்றும் தெரிவித்தார்.

ஒதுக்கப்பட்ட நிலையில் வாழும் மக்களைத் தேடிச்சென்று, அவர்களுக்கு மேய்ப்புப்பணியாற்றுவதை ஊக்குவிப்பதன் வழியாக, இரக்கம் மற்றும் கனிவென்ற மருந்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இம்மடல் ஓர் அழைப்பாக உள்ளது என்றும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.

ஆசியாவில், பாரம்பரியமாகவே, குடும்பங்கள் மிகவும் ஒன்றித்திருக்கின்றன என்றும், திருத்தந்தை, குடும்பங்களை, சமூக அக்கறையோடு இணைத்துப் பேசியுள்ளார் என்றும், சமூகங்கள், குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கினால் மட்டுமே, குடும்பங்கள் செழிக்க முடியும் என்றும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.