2016-04-06 14:53:00

ஈராக் பாராளுமன்றத்தில், கிறிஸ்தவர்களுக்கு கூடுதல் இடங்கள்


ஏப்ரல்,06,2016. ISIS இஸ்லாமிய அரசின் படைகளுக்கு எதிராக, ஈராக் அரசின் இராணுவம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, லூயில் இரபேல் சாக்கோ அவர்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

எர்பில் நகரில், நடைபெற்ற கல்தேய வழிபாட்டு முறை ஆயர்கள் கூட்டத்தில் இவ்வாறு கூறிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், இராணுவத்தின் முயற்சிகளுக்கு கிறிஸ்தவர்களின் ஆதரவு முழுமையாக உண்டு என்றும் குறிப்பிட்டார்.

ஈராக்கில் வாழும் மக்களில் 16 விழுக்காட்டினர் உணவு பாதுகாப்பு ஏதுமின்றி துன்புறுகின்றனர் என்றும், இவர்களில், பெரும்பாலானோர் குழந்தைகள் என்றும் கல்தேய வழிபாட்டு ஆயர்கள் அரசிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஈராக் பாராளுமன்றத்தில் மாற்றங்கள் வரவிருப்பதைச் சுட்டிக்காட்டிய ஆயர்கள், உருவாக்கப்படும் புதிய பாராளுமன்றத்தில், கிறிஸ்தவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

பாக்தாத் நகரில், கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமான இல்லங்களும், உடைமைகளும் குற்றக் கும்பல்கள் பிடியில் சிக்கியுள்ளன என்ற கவலையை வெளியிட்ட ஆயர்கள், அரசு, இக்குறையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டுமென விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.