2016-04-04 15:57:00

திருத்தந்தையின் டுவிட்டர் மற்றும் Instagram செய்திகள்


ஏப்ரல்,04,2016. "கிறிஸ்தவ நம்பிக்கை என்ற கொடையை நாம் திருமுழுக்கில் பெறுகிறோம்; இதுவே, இறைவனைச் சந்திப்பதற்கு நமக்கு வாய்ப்பளிக்கிறது" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இத்திங்களன்று வெளியிட்டார்.

மேலும், இரக்கத்தின் மறைப்பணியாளராக தான் இருக்க விரும்புவதாக, திருத்தந்தை அவர்கள் வெளியிட்ட ஒரு காணொளிப் பதிவின் ஒரு சிறு பகுதி, இஞ்ஞாயிறன்று Instagram செய்தியாக வெளியிடப்பட்டது.

கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கியூபா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு முன், கியூபா மக்களுக்கென வெளியிட்ட ஒரு காணொளிச் செய்தியின் ஒரு சில நொடிகள், இஞ்ஞாயிறன்று Instagram செயலி வழியே வெளியானது.

"இரக்கத்தின் மறைப் பணியாளராக, இறைவனின் கனிவை வெளிப்படுத்துபவராக நான் உங்கள் நடுவே வருகிறேன். இறைவனின் அளவற்ற அன்புக்குச் சாட்சிகளாக வாழ, உங்களையும் அழைக்கிறேன்" என்று திருத்தந்தை கூறியிருந்த வார்த்தைகள், இஞ்ஞாயிறன்று அவரது Instagram வலைப்பதிவில் இடம் பெற்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.