2016-04-04 15:09:00

இது இரக்கத்தின் காலம்:ஆதரவற்ற குழந்தைகளை அன்பாகப் பேணினால்


நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Anja Ringgren Loven அவர்கள், ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் தனது கணவருடன் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர்.  இவர், கடந்த ஜனவரி 31ம் தேதியன்று, ஆதரவற்ற நிலையில், உடல் மெலிந்து இறக்கும் நிலையில் இருந்த ஒரு ஆண் குழந்தையைச் சாலையில் கண்டு, அக்குழந்தை பற்றி விசாரித்தார். குழந்தை, ஒரு சூனியக்காரன் என்று நினைத்த பெற்றோர், அதனைத் தவிக்க விட்டுவிட்டு வேறு பகுதிக்குச் சென்றுவிட்டனர் என்று அறிய வந்தார். உடனே அக்குழந்தையை அள்ளி அணைத்த அந்தச் சமூக சேவகி Loven அவர்கள், அதற்குத் தண்ணீர் மற்றும் உணவுகளை அளித்தார். பின்னர், அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று குழந்தையின் உடலில் உள்ள அசுத்தங்கள் மற்றும் வயிற்றில் இருந்த புழுக்களை நீக்கி அன்பாகப் பராமரித்தார். மேலும், குழந்தைக்கு புதிய இரத்தம் செலுத்துவது உள்ளிட்ட அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்தார். குழந்தையின் மெலிந்துபோன உடலுடன், முகநூலில் புகைப்படம் வெளியிட்டு அதற்கான மருத்துவச் செலவுகளுக்கு நிதியுதவி கேட்டார். குழந்தையின் நிலையைப் பார்த்து, உலகம் முழுவதிலுமிருந்து பத்து இலட்சம் டாலர் நிதியுதவி கிடைத்தது. இந்த நிதியுதவியைப் பயன்படுத்தி, குழந்தையை நன்றாகப் பராமரித்து வந்ததன் விளைவாக எட்டு வாரங்களுக்குப் பிறகு அந்தக் குழந்தை நலமாக வளர்ந்துள்ளது. இந்தக் குழந்தை, மற்றவர்களுக்கும் நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காக, இந்தக் குழந்தைக்கு ’நம்பிக்கை’ (Hope) எனப் பெயர் சூட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தக் குழந்தைக்கு தற்போது சிறுநீரகத்தில் ஒரு பிரச்சனை உள்ளது. ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அதுவும் குணமாகிவிடும் என்றும் சொல்லும் Anja Ringgren Loven அவர்கள், இந்தக் குழந்தை, தற்போது தனது ஆசிரமத்திலுள்ள மற்ற 35 குழந்தைகளுடன் நலமாக விளையாடி வருவதாக மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார். ஆம். ஆதரவற்ற குழந்தைகளை அன்பாகப் பராமரித்தால், அவர்களின் எந்த சூழலையும் நாம் வெற்றி பெறலாம். இது இரக்கத்தின் காலம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.