2016-03-18 15:59:00

எளியவர்களைத் தேடிச்செல்ல விண்ணப்பித்த திருத்தந்தை


மார்ச்,18,2016. விவிலியம், அருளடையாளங்கள் மற்றும் செபம் ஆகியவற்றின் சக்திக்கு முன், இறைவனுக்கும், மனிதருக்கும் எதிரியான சாத்தான், ஒன்றுமில்லாமல் போகிறான் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை, வத்திக்கானின் அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் உரையாற்றினார்.

திருஅவை உறுப்பினர்களை புது வழியில் உருவாக்கும் Neocatechumenal Way என்ற அமைப்பைச் சேர்ந்த 7000த்திற்கும் அதிகமானோரை இவ்வெள்ளியன்று சந்தித்தத் திருத்தந்தை, விவிலியத்தில் காணப்படும் ஒற்றுமை, மாட்சிமை, உலகம் என்ற மூன்று வார்த்தைகளை மையப்படுத்தி, தன் உரையை வழங்கினார்.

மனிதர்களைப் பிரிப்பதில் முழு மூச்சுடன் செயலாற்றும் சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிப்பது Neocatechumenal அமைப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்று திருத்தந்தை கூறினார்.

திருமுழுக்கு பெற்ற அனைவரும் அன்னையாம் திருஅவையின் குழந்தைகள் என்பதால், நாம் அனைவரும் ஒரே சாயல் கொண்டவர்கள் என்றும், நமக்குள் எவ்வித வேறுபாடும் இல்லை என்றும் திருத்தந்தை, தன் உரையில் வலியுறுத்தினார்.

இயேசு தன் சிலுவை வழியே மாட்சிமை பெறுவதைப் பற்றி, யோவான் நற்செய்தியில் கூறப்பட்டுள்ளதை (யோவான் 17,5), அரங்கத்தில் கூடியிருந்தோருக்கு நினைவுறுத்தியத் திருத்தந்தை, இரக்கம் கொள்ளுதல், துன்பத்தில் பங்கேற்றல் என்ற பண்புகள் வழியாகத்தான் அன்னையாம் திருஅவை மாட்சிமை பெறமுடியும் என்று கூறினார்.

உலகின் மீது பெருமளவு அன்பு கொண்டுள்ள இறைவன், (யோவான் 3:16) அந்த உலகில், உயர்ந்தவற்றையும், பெரியனவற்றையும் நாடாமல், எளியவற்றை நாடி வருகிறார் என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, Neocatechumenal Way அமைப்பைச் சார்ந்தவர்களும், இவ்வுலகில் எளியவர்களைத் தேடிச்செல்ல விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.