2016-03-18 16:24:00

அயர்லாந்து மக்களுக்கு புனித பேட்ரிக் திருவிழாச் செய்தி


மார்ச்,18,2016. அயர்லாந்தில் உள்ள ஒரு சிலர், வன்முறைகளைத் தூண்டிவந்தாலும், அயர்லாந்து மக்கள், பாலங்களைக் கட்டுவதிலும், அமைதியை வளர்ப்பதிலும் அக்கறையுள்ளவர்கள் என்று அயர்லாந்து ஆயர் பேரவையின் தலைவர், பேராயர், ஈமோன் மார்ட்டின் (Eamon Martin) அவர்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

மார்ச் 17, இவ்வியாழனன்று, அயர்லாந்தின் பாதுகாவலரான புனித பேட்ரிக் திருநாள் கொண்டாடப்பட்டதையொட்டி, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் மார்ட்டின் அவர்கள், இவ்வாறு தன் செய்தியில் கூறியுள்ளார்.

புனித பேட்ரிக் வாழ்க்கையால் தூண்டப்பட்ட அயர்லாந்து மக்கள் அனைவரும், இரக்கத்தை தங்கள் வாழ்வில் மையமாகக் கொண்டிருக்கவேண்டும் என்று, பேராயர் மார்ட்டின் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

வறுமை, வீடற்ற நிலை போன்ற பிரச்சனைகளால் அயர்லாந்தில் குடும்ப வாழ்வு சிதைந்து வருகிறது என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டும் பேராயரின் செய்தி, புனித பேட்ரிக் பரிந்துரையால் மக்கள் நம்பிக்கையுடனும், இரக்கத்துடனும் வாழ அழைப்பு விடுக்கிறது.

அதிகாரப்பூர்வ ஆவணங்கள் ஏதுமின்றி, ஓர் அடிமையாக வாழ்ந்த புனித பேட்ரிக், இன்றைய உலகில், ஆவணங்கள் ஏதுமின்றி அலைக்கழிக்கப்படும் ஆயிரமாயிரம் புலம் பெயர்ந்தோருக்கு ஓர் அடையாளமாக விளங்குகிறார் என்பதையும் பேராயர் மார்ட்டின் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.