2016-03-17 15:56:00

போர்த்துகல் அரசுத் தலைவருடன் திருத்தந்தையின் சந்திப்பு


மார்ச்,17,2016. இவ்வியாழன் காலை, போர்த்துகல் நாட்டின் அரசுத் தலைவர், மார்செலோ ரெபெலோ தெ சூசா (Marcelo Rebelo de Sousa) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

இம்மாதம் 9ம் தேதி போர்த்துகல் நாட்டின் புதிய அரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற ரெபெலோ தெ சூசா அவர்கள் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் வத்திக்கானுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பீடத்திற்கும், போர்த்துகல் நாட்டிற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், அந்நாட்டில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும், சிறப்பாக, குடும்ப வாழ்வை மையப்படுத்தி, திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.

மேலும், மக்தியக் கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறி, ஐரோப்பிய நாடுகளை அடைந்துள்ள புலம் பெயர்ந்தோர் நிலை குறித்தும் இச்சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.

அரசுத் தலைவர், ரெபெலோ தெ சூசா அவர்கள், திருத்தந்தையுடன் மேற்கொண்ட இச்சந்திப்பிற்குப் பின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.