2016-03-17 15:38:00

திருத்தந்தை: இளையோரின் பார்வை, வறியோர்மீது திரும்பவேண்டும்


மார்ச்,17,2016. பல்கலைக் கழக மாணவர்கள் என்ற முறையில், நீங்கள் உங்கள் தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, உங்களைச் சுற்றியுள்ள உடனடி சமுதாயம், மற்றும் உலகில் பரந்துபட்ட சமுதாய முன்னேற்றத்தின் நன்மையைக் குறித்தும் சிந்திப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த 3000த்திற்கும் அதிகமான இளையோரிடம் கூறினார்.

Harvard World Model United Nations என்ற ஓர் அமைப்பு, மார்ச் 14, இத்திங்கள் முதல், 18 இவ்வெள்ளி முடிய, உரோம் நகரில் நடத்திவரும் ஒரு பன்னாட்டுக்  கருத்தரங்கில் கலந்துகொள்ளும் இளையோரை, இவ்வியாழன் நண்பகல், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

இளையோருக்குக் கிடைத்துள்ள இத்தகைய ஒரு வாய்ப்பு, அவர்களின் பார்வையையும், எண்ணத்தையும் சமுதாயத்தில் நலிந்திருப்போர் மீது திருப்பினால், அதுவே, இத்தகைய அமைப்புக்கள் ஆற்றக்கூடிய சிறந்த பணி என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

ஐ.நா.அவையைப் போல செயலாற்ற, பல்கலைக் கழக மாணவர்களைப் பயிற்றுவிக்கும் இவ்வமைப்பின் பன்னாட்டு கூட்டங்கள் வழியே, ஐ.நா.அவை எவ்விதம் பன்னாட்டு உறவுகளை கட்டமைத்துள்ளது என்பதை மட்டும் பயில்வதில் பொருளில்லை, மாறாக, ஐ.நா.அவை போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், வறியோருக்கும், ஒதுக்கப்பட்டோருக்கும் எவ்விதம் பணியாற்றுகிறது என்பதை அறிந்துகொள்வது இளையோருக்கு பயனளிக்கும் என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

பன்னாட்டளவில் ஏற்பாடு செய்யப்படும் இத்தகையக் கருத்தரங்குளில் பேசப்படும் பிரச்சனைகள், வெறும் ஏட்டளவு பிரச்சனைகள் அல்ல, மாறாக, அவை ஒவ்வொன்றுக்கும் பின்னே, மனிதர்கள், தங்கள் ஏக்கங்களோடும், கனவுகளோடும் காத்திருக்கின்றனர் என்பதை, இளையோர் உணரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

உலகில் வளர்ந்துவரும் வன்முறைகளின் விளைவாகப் பெருகிவரும் புலம் பெயர்ந்தோரைக் குறித்தும், இவர்களுக்கு திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தின் வழியே இளையோர் கற்றுக்கொள்வதை தான் விரும்புவதாக திருத்தந்தை கூறினார்.

1992ம் ஆண்டு துவக்கப்பட்ட Harvard World Model United Nations அமைப்பு, தன் 25ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, அதன் உறுப்பினர்கள் 110 நாடுகளில் உள்ளனர் என்றும், இவ்வாண்டு கூட்டத்திற்கு, "எதிர்கால 25" என்பது மையக் கருத்தாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.