2016-03-17 16:05:00

இரக்கத்தை முதன்மைப்படுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்,17,2016. இறைவனின் இரக்கமே நம்மை அவரிடம் இணைக்கிறது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மேய்ப்புப்பணியில் முதன்மைப்படுத்தியுள்ளார் என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார்.

இத்தாலியில் வெளியாகும் Avvenire என்ற நாளிதழுக்கு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வழங்கிய ஒரு  பேட்டியில், இறைவனின் நீதி என்ற எண்ணம் நம்மை அச்சுறுத்தினாலும், அவரது இரக்கம் நம்மை அவரருகே கொண்டு செல்கிறது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவாக்கியுள்ளார் என்று கூறினார்.

இயேசுவே உலகமனைத்திற்கும் மீட்பர் என்ற எண்ணத்திற்கும், கத்தோலிக்கத் திருஅவை, ஏனைய மதங்களோடு உரையாடல் மேற்கொள்ளவேண்டிய கடமை உள்ளது என்ற எண்ணத்திற்கும் இடையே நிலவும் இறுக்கத்தைக் குறித்து, முன்னாள் திருத்தந்தை அவர்கள், இப்பேட்டியில் எடுத்துரைத்துள்ளார்.

இந்த இறுக்கத்தை குறைக்கக்கூடிய ஒரே மருந்து, இறைவனின் இரக்கம் என்பதால், அந்த எண்ணத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பணிக்காலத்தில் வலியுறுத்தி வருகிறார் என்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய உலகில் மனிதர்கள் அதிகம் காயப்பட்டிருப்பதால், தங்கள் வேதனைகளைக் குறைக்க நீதி என்ற எண்ணத்தை வெகுவாக வலியுறுத்திவருகின்றனர் என்று கூறிய, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இறைவனின் இரக்கம் ஒன்றே நம் வேதனைகளைக் குறைக்கவல்லது என்பதை இப்பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.