2016-03-17 13:04:00

இது இரக்கத்தின் காலம் – அரக்கனிடமும் இரக்கம்


அரக்கன் ஒருவன் தினமும் ஒருவரைப் பிடித்து உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். ஒருமுறை, ஓர் அந்தணரின் குடும்பத்தினர் அவனிடம் சிக்கிக் கொண்டனர். அரக்கன் அவர்களிடம், உங்களில் ஒருவர் எனக்கு இரையாக வேண்டும் என்றான். அந்தணர் அவனிடம், எனது மனைவி நோயாளி. அவரைத் தின்றால் அந்த நோய் உன்னையும் பற்றும். நான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளேன். மூத்த மகன் மேல் எனக்குப் பாசம். இளையவன்மேல் என் மனைவிக்குப் பாசம். அதனால் நடுவிலுள்ள மகனை எடுத்துக்கொள் என்றார். அரக்கனும் சம்மதித்தான். அந்த மகனைத் தன்னருகே இழுத்தபோது அவன் சிரித்தான், பிறகு அழுதான். ஏனப்பா முதலில் சிரித்தாய், பிறகு அழுகிறாய், எதற்காக அப்படிச் செய்தாய் என்று அரக்கன் கேட்டான். அரக்கனே, மனிதர்களை உண்பது இராட்சதர்களுக்கு இயல்பு. அதில் தவறில்லை. ஆனால், பெற்ற பிள்ளை என்றும் பாராமல் என்னை உனக்கு உணவாக்க முனைந்த இந்தப் பெற்றோரை எண்ணினேன். யார் இராட்சதர் என்ற சந்தேகம் வந்துவிட்டது. அதனால் சிரித்தேன். இருப்பினும், பெற்றவர்களைப் பிரியப்போகிறோமே என்ற வேதனையால் அழுதேன் என்றான். இந்த விளக்கம் கேட்டு அரக்கனே இரங்கிவிட்டான். அவனையும் விடுவித்தான். அரக்கனிடமும் இரக்கம் உள்ளது. இது இரக்கத்தின் காலம் 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.