2016-03-16 16:08:00

இது இரக்கத்தின் காலம் : இரண்டே வார்த்தைகளில் புரிந்துகொள்தல்


ஜென் மடாலயம் ஒன்றில், மௌனம், மிகத் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அங்கிருக்கும் யாரும் பேச அனுமதிக்கப்படுவதில்லை. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசலாம் என்று விதிமுறை இருந்தது, மடாலயத்தில்.

புதிதாக ஒரு துறவி அங்கு வந்து வசிக்க ஆரம்பித்தார். பத்து ஆண்டுகள் கடந்தபின், அவரை அழைத்த மடாதிபதி, "நீ வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. நீ இரண்டு வார்த்தைகள் பேசலாம். என்ன கூற விரும்புகிறாய்?" என்று கேட்டார். அதற்குத் துறவி, "படுக்கை... கடினம்..." என்றார்.

"ஓஹோ" என்றார் மடாதிபதி.

மீண்டும் பத்து ஆண்டுகள் கடந்தன. துறவி மறுபடியும் மடாதிபதியின் அறைக்கு வந்தார்.

"நீ பேச விரும்பும் இரண்டு வார்த்தைகளைப் பேசலாம்" என்றார் மடாதிபதி. துறவியோ, "உணவு... மோசம்" என்றார். "ஓஹோ" என்றார் மடாதிபதி.

மேலும் பத்து ஆண்டுகள் கடந்தபின், துறவி மறுபடியும் மடாதிபதியின் அறைக்கு வந்தார். "நீ பேச விரும்பும் இரண்டு வார்த்தைகளைச் சொல்" என்று மடாதிபதி கூறினார். "நான்... போகிறேன்" என்றார் துறவி. "சரி! நீ ஏன் போக விரும்புகிறாய் என்று எனக்குத் தெரியும். நீ எப்போதும் சொல்ல விரும்புவது, புகார்தான்!" என்றார் மடாதிபதி.

மற்றவர்களை முதலில் ஏற்றுக் கொண்டால், அவர்களை புரிந்துகொள்வது, அதன்பின் எளிதாக இருக்கும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.