2016-03-16 17:05:00

அன்னை தெரேசா உருவாக்கிய சபையில் மகிழ்ச்சி


மார்ச்,16,2016. எங்கள் அன்னை புனிதராக உயர்த்தப்பட விருப்பதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறோம்; திருத்தந்தைக்கும் நன்றி கூறுகிறோம். அன்னையின் அன்புப் பணியை இன்னும் ஆழமாகக் கற்றுக்கொள்ளவும், அவ்வழியில் தொடர்ந்து பணியாற்றவும் நாங்கள் தூண்டப்பட்டுள்ளோம் என்று அன்னை தெரேசா அவர்களால் உருவாக்கப்பட்ட துறவு சபையின் தலைவர், அருள்சகோதரி பிரேமா அவர்கள் UCAN செய்தியிடம் கூறினார்.

அன்னை தெரேசாவின் புனிதர் பட்டவிழாவின் தேதி அறிவிக்கப்பட்டதும் நிகழ்ந்த நன்றித் திருப்பலியில், கொல்கத்தா பேராயர் தாமஸ் டிசூசா அவர்கள், மறையுரை ஆற்றுகையில், வறுமை, நோய் போன்ற சிலுவைகளை உலகெங்கும் கண்ட அன்னை தெரேசா அவர்கள், சிலுவையில் அறையுண்ட இயேசுவிடமிருந்து தன் சக்தியைப் பெற்றார் என்று கூறினார்.

தன் துறவு சபை வழியே உலகிற்கு பல புனிதர்களை வழங்கப்போவதாகக் கூறிய அன்னை தெரேசா அவர்கள், அப்புனிதர்களின் வரிசையில் முதலிடம் பெறுவது மிகப் பொருத்தமானதே என்று பேராயர் தாமஸ் டிசூசா அவர்கள் மேலும் கூறினார்.

செப்டம்பர் 4ம் தேதி, அருளாளர் அன்னை தெரேசா வத்திக்கானில் புனிதராக உயர்த்தப்படும் நிகழ்வையொட்டி, கொல்கத்தா உயர் மறைமாவட்டத்துடன் இணைந்து, பிறரன்பு மறைப்பணி சகோதரிகள் பல்வேறு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுள்ளதாக, UCAN செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.