2016-03-12 16:38:00

போலந்து நாட்டில் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம்


மார்ச்,12,2016. போலந்து நாட்டின் கிரகோவ் (Krakow) நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஜூலை மாதம் 27ம் தேதி முதல், 31ம் தேதி முடிய அந்நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்ற செய்தி, இச்சனிக்கிழமை, அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

போலந்து நாட்டு அரசின் உயர்மட்ட அதிகாரிகள், மற்றும் அந்நாட்டின் ஆயர்கள் விடுத்துள்ள அழைப்பை ஏற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பயணத்தை மேற்கொள்கிறார் என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

மேலும், மார்ச் 13, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தலைமைப் பணியில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், அவர் புனித பேதுரு வளாகத்தில் வழங்கவிருக்கும் நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர், அங்கு கூடியிருப்போருக்கு, 'இரக்கத்தின் நற்செய்தி' என்றழைக்கப்படும் லூக்கா நற்செய்தியின் கையடக்கப் பிரதி ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்று, திருத்தந்தையின் தர்மச் செயல்களை ஒருங்கிணைக்கும் துறை அறிவித்துள்ளது.

2014ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியும், 2015ம் ஆண்டு மார்ச் 22ம் தேதியும், இதேவண்ணம், கையடக்க நற்செய்தி நூல்கள், புனித பேதுரு வளாகத்தில், நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.