மார்ச்,08,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித சமுதாயத்தின் அதிகாரமுள்ள போதகராக வளர்ந்து வருவதாக உணர்கிறேன் என்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராக நியமிக்கப்பட்ட மூன்றாம் ஆண்டு, மார்ச் 13, வருகிற ஞாயிறன்று நிறைவடைவதை முன்னிட்டு வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த அருள்பணி லொம்பார்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டில் ஏறக்குறைய எல்லாக் கண்டங்களுக்கும் சென்றிருக்கிறார், இன்றையத் திருஅவை மற்றும் மனித சமுதாயம் சார்ந்த கேள்விகளை முன்வைத்தார், அமைதி, நீதி, போர், புறக்கணிப்புக் கலாச்சாரம், என்று, ஏறக்குறைய எல்லாத் தலைப்புகள் பற்றியும் பேசியிருக்கிறார் என்றும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.
குறிப்பாக, “Laudato si’” என்ற திருமடலில், இன்றைய மற்றும் நாளைய மனித சமுதாயம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை பற்றிய கேள்வியையும் எழுப்பியுள்ள திருத்தந்தை, மனித சமுதாயத்தின் வருங்காலத்தை நோக்கிய பாதையில், வலிமையுள்ளவரும், ஏழைகளும் சரிசமமாக கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார் அருள்பணி லொம்பார்தி.
இரக்கத்தின் யூபிலி ஆண்டையும் கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதிதான் திருத்தந்தை அறிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |