2016-03-09 15:51:00

உலக மகளிர் நாளுக்கென ஐ.நா. பொதுச் செயலரின் செய்தி


மார்ச்,09,2016. பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் உரிமைகள் மறுக்கப்படுவதைக் கேட்கும்போது, நான் ஆத்திரமடைகிறேன்; ஆயினும், பெண்களுக்கு வழங்கப்படும் அதிகாரமே, மனித சமுதாயத்திற்கு முன்னேற்றம் தரும் என்று மக்கள் எல்லா நாடுகளிலும் உணர்ந்து வருவது, எனக்கு உற்சாகமூட்டுகிறது என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

மார்ச் 8, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட உலக மகளிர் நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், பெண்களின் முன்னேற்றத்திற்கு ஒதுக்கப்படும் நிதி உதவியே, உலகில் தலை சிறந்த முதலீடு என்று கூறியுள்ளார்.

நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை 2030ம் ஆண்டுக்குள் அடைவதற்கு, பாலின சமத்துவம் இன்றியமையாத ஒரு வழி என்பதை, அனைத்து நாடுகளும் உணர்ந்து, துரிதமாகச் செயல்படவேண்டும் என்று, பான் கி மூன் அவர்கள் தன் செய்தியில் கூறியுள்ளார்.

"2030ம் ஆண்டுக்குள் பூமிக்கோளம் 50-50: பாலின சமத்துவத்தைத் துரிதப்படுத்துதல்" என்ற மையக் கருத்துடன் கொண்டாடப்பட்ட உலக மகளிர் நாளையொட்டி, ஐ.நா.அவையின் அதிகாரிகள் பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டனர் என்று ஐ.நா. செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.