மார்ச்,07,2016. உரோம் கத்தோலிக்கத் திருஅவையோடு ஒன்றிப்பை உறுதிசெய்து அறிக்கை வெளியிட்ட, உக்ரேய்ன் கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர் முதுபெரும் தந்தை Sviatoslav Shevhchuk அவர்களுக்கு, ஆழ்ந்த நன்றி தெரிவித்து இஞ்ஞாயிறன்று கடிதம் அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கீவ் பேராயரும், உக்ரேய்ன் கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவைத் தலைவருமான Shevhchuk அவர்கள், அத்திருஅவையின் நிலைத்த குழுவுடன் கடந்த சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்தார். அதற்குப் பின்னர், உரோம் கத்தோலிக்கத் திருஅவையோடு ஒன்றிப்பை உறுதி செய்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட கருத்தியல் மற்றும் அரசியல் சூழல், அதோடு, கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவையின் இருப்புக்கே முரணாண கருத்துக்களால், அத்திருஅவையின் மேய்ப்பர்களும், விசுவாசிகளும் பல ஆண்டுகளாக அனுபவித்த துன்பங்களை, அக்கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளார் திருத்தந்தை.
அச்சமயத்தில் துன்பங்களுக்கு மத்தியிலும் விசுவாசத்திற்குத் தொடர்ந்து சான்று பகர்ந்தது மற்றும், தூய பேதுருவின் வழிவருபவரோடு ஒன்றித்திருப்பதற்கு அர்ப்பணித்ததைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, சாட்சிய வாழ்வைத் தொடர்ந்து உறுதியுடன் வாழுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |