2016-03-07 15:29:00

இது இரக்கத்தின் காலம் – இறைவன் எல்லாருக்கும் தந்தை


இளவரசர் ஒருவர் தனது தந்தையைவிட்டுப் பிரிந்து நூறு நாள்கள் பயணம் செய்து வேறு இடம் நோக்கிப் போய்விட்டார். இளவரசரைப் பாரத்த அவரின் நண்பர்கள், உன் தந்தையிடம் திரும்பிப் போ என்றார்கள். இளவரசரோ, என்னால் முடியவில்லை என்று சொல்லிவிட்டார். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட அரசர் தனது மகனுக்குச் செய்தி அனுப்பினார். “மகனே! உன்னால் முடிந்தஅளவு தூரம் பயணம் செய்து என்னிடம் திரும்பி வா. மீதித் தூரத்தை நானே நடந்து வந்து உன்னை எதிர்கொள்கிறேன்” என்று அரசர் அச்செய்தியில் எழுதியிருந்தார். இப்படி யூதமதப் போதனையில் சொல்லப்பட்டுள்ளது. இறைவன் நம் எல்லாருக்கும் தந்தை. நாம் இறைவனைவிட்டு விலகிச் சென்றாலும், அவர் நம்மை நினைத்துக்கொண்டே இருக்கிறார். நமது தவறுகள் பெரியவைகளாக இருந்தாலும், அவரின் அன்புக்கு நாம் விசுவாசமாக இல்லாவிடினும், நாம் திரும்பி அவரிடம் செல்லும்போது கனிவோடு நம்மை ஏற்கிறார். அவரிடம் நாம் திரும்பி வரவேண்டுமென்று காத்திருக்கிறார். குழந்தாய், என்னை நோக்கித் திரும்பி வா. நானும், உன்னை நோக்கி வருகிறேன் என்று சொல்கிறார் இறைவன். இது இரக்கத்தின் காலம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.