2016-03-02 16:22:00

மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி, இன்னும் கிடைக்கவில்லை


மார்ச்,02,2016. மக்கள் அடைந்துவரும் உண்மையானக் கொடுமைகளை அரசியலாக்கிவிடுவதால், மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி, முப்பது ஆண்டுகள் கடந்தும் கிடைக்கவில்லை என்று இந்தியாவின் போபால் பேராயர், லியோ கொர்னேலியோ அவர்கள் கூறினார்.

1984ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி, மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் Union Carbide ஆலையிலிருந்து வெளியேறிய நச்சு வாயு தாக்குதலால் 5,300 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் என்று UCAN செய்தி, புள்ளி விவரங்களை வழங்கியுள்ளது.

இந்த நச்சு வாயு விபத்தினால், அடுத்து வந்த ஆண்டுகளில், 25,000த்திற்கும் அதிகமானோர் இறந்தனர் என்று, மனித நல அமைப்புக்கள் கூறி வருகின்றன.

உலகில் இதுவரை நடைபெற்றுள்ள தொழிற்சாலை விபத்துக்களிலேயே மிகப் பெரிய விபத்து என்று கணிக்கப்பட்டுள்ள இந்த விபத்தில் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் சேரவேண்டிய நீதியான இழப்புத் தொகை இன்னும் சென்று சேரவில்லை என்பதற்கு, இவ்விபத்தை வைத்து அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் விளையாட்டே காரணம் என்று பேராயர் கொர்னேலியோ அவர்கள் UCAN செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.