2016-01-23 14:54:00

திருத்தந்தை : கடவுளின் இரக்கத்தை அறிவியுங்கள்


சன.23,2016. கடவுளின் இரக்கத்தின் புதுமையை அறிவிப்பதற்குப் புதிய வழிகளைக் காணுமாறு, பிலிப்பீன்ஸ் ஆயர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு தொடங்கவிருக்கும் செபு நகரில் ஆண்டுக் கூட்டத்தை நடத்திவரும் பிலிப்பீன்ஸ் ஆயர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் நிலையான அன்பை ஒவ்வொருவருக்கும் திருஅவை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இவ்வாறு திருஅவை செயல்படுவதன் வழியாக, இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டு, இரக்கம் பற்றி இன்னும் அதிகக் கவனத்துடன் நோக்குவதற்குரிய காலமாக உண்மையிலேயே அமையும் என்றும், நம் வாழ்வில் வானகத் தந்தையின் செயல்களின் சாரமுள்ள அடையாளமாக நாம் மாறுவோம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 22, இவ்வெள்ளியன்று, செபு பேராலயத்தில் திருப்பலியுடன் தொடங்கிய பிலிப்பீன்ஸ் ஆயர்கள் கூட்டம், சனவரி 24, இஞ்ஞாயிறன்று நிறைவடையும். இக்கூட்டத்தில், அந்நாட்டில் வருகிற மே 9ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்கள் உட்பட பல விவகாரங்கள் கலந்து பேசப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.