2016-01-14 15:32:00

வளர் இளம் பருவத்தினருக்கு திருத்தந்தையின் யூபிலிச் செய்தி


சன.14,2016. "இளைய நண்பர்களே, உங்கள் ஒவ்வொருவரின் பெயரும் விண்ணகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது, உங்கள் ஒவ்வொருவரையும் நான் பெயர் சொல்லி அழைக்கிறேன்" என்ற சொற்கள் அடங்கிய செய்தி ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

நடைபெறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, ஏப்ரல் 24, ஞாயிறன்று, உரோம் நகரில், 13 முதல் 16 வயதுக்கு உட்பட்ட, வளர் இளம் பருவத்தினருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யூபிலி விழாவில் கலந்துகொள்ள உரோம் நகருக்கு வருகை தரும் இளையோரையும், இவ்விழாவில் கலந்துகொள்ள முடியாத இளையோரையும் மனதில் கொண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள செய்தி, இவ்வியாழனன்று வெளியானது.

இந்த யூபிலி ஆண்டு முழுவதையும் ஒரு விழாவாகக் கொண்டாட நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, இந்த விழாவில் பங்கேற்க, யாரையும் தள்ளி வைக்காமல், அனைவரையும் இயேசு அழைத்துள்ளார் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்த யூபிலி ஆண்டின் விருதுவாக்கான, "தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல்" என்பதை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இரக்கம் நிறைந்திருப்பது என்பது, அச்சமின்றி, தாராள மனதுடன் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது என்று எடுத்துரைத்துள்ளார்.

வளர் இளம் பருவத்தில் இருப்போர் தங்கள் வாழ்வில் பெரும் மாற்றங்களை உணர்கின்றனர் என்பதை எடுத்துரைக்கும் திருத்தந்தை, இந்த மாற்றங்களில், அவர்கள் சரியான முடிவுகள் எடுக்கவும், அந்த முடிவுகளால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டாலும், மன உறுதியுடன் வாழவும் இறைவன் அருள் வழங்கவேண்டும் என்பதை தன் ஆழ்ந்த ஆவலாக வெளிப்படுத்தியுள்ளார்.

போர், கடினமான வறுமை, ஒவ்வொரு நாள் துன்பங்கள், மற்றும் தனிமை ஆகிய துயரமான நிலைகளில் சிக்கியுள்ள வளர் இளம் பருவத்தினரை தன் செய்தியில் சிறப்பாக நினைவுக் கூர்ந்துள்ள திருத்தந்தை, அவர்கள் அனைவரும் நம்பிக்கை இழக்காமல், இறைவனின் இரக்கத்தில் பற்றுறுதி கொண்டு வாழவேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

13 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட இளையோர், குறிப்பாக, தங்கள் உறுதிப்பூசுதல் அருள் அடையாளத்தைப் பெற்றுள்ள இளையோருக்கென ஏப்ரல் 24ம் தேதி, வத்திக்கானில் சிறப்பு யூபிலி கொண்டாட்டங்கள் நிறைவேறும் என்றும், 17 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்கு ஜூலை 26ம் தேதி முதல், 31ம் தேதி முடிய போலந்து நாட்டில் உலக இளையோர் நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும் என்றும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கும் குழு அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.