2016-01-13 15:37:00

புதன் மறைக்கல்வி உரை – இரக்கமும் பரிவும் உள்ளவர் இறைவன்


சன.13,2016. அன்புச் சகோதர சகோதரிகளே! இந்த யூபிலி ஆண்டில் நம் புதன் மறைக்கல்வி உரைகள், இறைவனின் இரக்கம் எனும் மறையுண்மை குறித்து அகழ்ந்து அறிய உதவுவதாக இருக்கும். விடுதலைப் பயண நூலில், கடவுள் தன்னை, இரக்கத்தின் கடவுள் என விவரிக்கின்றார்.  "ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்" என பழைய ஏற்பாட்டு நூல் முழுவதும் எதிரொலிக்கும் வார்த்தைகளை, விடுதலைப்பயண நூலில் இறைவன் மோசேயிடம் சொல்வதைக் காண்கிறோம்(வி.ப.34:6). இரக்கத்தைக் குறிக்கும் எபிரேய வார்த்தையானது, ஒரு தாய், தன் குழந்தை மீது காட்டும் கனிவையும், உள்ளுணர்விலிருந்து எழும் ஆழமான அன்பையும் எடுத்துரைப்பதாக உள்ளது.  கடவுளின் கருணை, கனிவு வாய்ந்ததாகவும், அருள் நிறைந்ததாகவும் உள்ளதுடன், நம்மைப் புரிந்து கொள்வதற்கும், மன்னிப்பதற்கும் எப்போதும் தயாரானதாகவும் உள்ளது. பொறுமையுடன் காத்திருக்க இறைவன் தயாராக இருக்கிறார், ஏனெனில், அவர் கோபம் கொள்ள காலம் தாழ்த்துகிறார். அவரது நடவடிக்கைகள், ஒரு ஞானமுள்ள விவசாயியைப்போல் உள்ளன.  பாவங்களுக்காக மனம் வருந்தும் மனநிலை எனும் விதைகள் நம் இதயங்களில் முளைவிடவேண்டும் என அவர் காத்திருக்கிறார். அதைப்போன்று, நிலையுறுதியுடைய அன்பிலும், வாக்கு மாறா நிலையிலும் நிரம்பியிருப்பவராக இறைவன் காணப்படுகிறார். இலவசமாகவே வழங்கப்படும் இறைவனின் அன்பு, நம் தகுதியைச் சார்ந்ததாக இல்லாமல் அதையெல்லாம் தாண்டியதாக உள்ளது. காணாமல்போன மகன் உவமையில் காணப்படும் தந்தையைப்போல் இறைவனின் வாக்கு மாறா நிலைக்கு எவ்வித வரையறையும் இல்லை. நம் பாவங்களை மன்னிக்கவும்,  அவரோடு நல்ல உறவில் வளரவும் நாம் திரும்பி வரவேண்டும் எனவும், எப்போதும் தயாராக காத்திருக்கிறார் இறைவன். இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இறை இரக்கத்திலும், அவர் அருளிலும், வாக்குமாறா நிலையிலும், அன்பிலும் முழு நம்பிக்கை கொண்டவர்களாக, நம் முழு இதயத்தோடு இறைவனை நோக்கித் திரும்புவோம்.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வய்க்கிழமையன்று இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக செபிக்கும்படிக் கேட்டுக்கொண்டார்.  இறந்தோருக்கு மறுவுலகில் நிறைசாந்தியையும், இறந்தோரின் உறவினர்களுக்கு ஆறுதலையும், முழு சமூகத்கிற்கும் மன உறுதியையும், வன்முறையில் ஈடுபடுவோருக்கு மனமாற்றத்தையும் இறைவன் வழங்குவாராக, என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். துருக்கியின் இஸ்தான்புல்லில் ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், 8 செர்மானியர்கள் உட்பட 10 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.